புதிய வருமான வரித்தளம் மூலம் மக்கள் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், மத்திய நிதியமைச்சகமும், வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனமும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட ஒரு குளறுபடிக்கு வருமான வரித்துறை தீர்வை கண்டுள்ளது.
இதனால் வருமான வரி செலுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் வருமான வரித்துறை தேவையில்லாமல் வசூலித்த வரி மற்றும் அபராத தொகை திருப்பி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
புதிய வருமான வரித் தளம்
புதிய வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜூலை 31ஆம் தேதிக்குப் பின் வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட பல வருமான வரிச் செலுத்துவரிடம் இருந்து கூடுதலான வட்டி மற்றும் தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வருமான வரித்துறை செப்டம்பர் 30 வரையில் வருமான வரி செலுத்தக் கால நீட்டிப்பு செய்துள்ள நிலையிலும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
இது முழுக்க முழுக்கத் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே நடந்துள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் 2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்தும் போது கூடுதலான வட்டி மற்றும் தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அது மொத்தமாகத் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30 வரை
செப்டம்பர் 30 வரையில் வருமான வரி செலுத்த அனுமதிக்கப்பட்டு உள்ள வேளையில் ஜூலை 31 வரையிலான காலத்தை புதிய வருமான வரித்தளம் கணக்கிடப்பட்டதால் கூடுதல் வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதைச் சரி செய்ய வாடிக்கையாளர்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகையைத் திரும்பி அளிக்க உள்ளோம் என வருமான வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
இரு பிரிவில் சட்ட திருத்தம்
ஆகஸ்ட் 1ஆம் தேதி புதிய வருமானத்தில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டு உள்ளது. வருமான வரி 234A மற்றும் தாமதம் கட்டணமான 234F ஆகிய இரு வருமான வரி சட்டத்தின் கீழ் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வட்டி மற்றும் தாமதக் கட்டணம்
மேலும் வருமான வரி செலுத்துவோர் புதிய வருமான வரி திட்டமிடல் மென்பொருள் மற்றும் ஆன்லைன் பைலிங் சிஸ்டத்தைப் பயன்படுத்த வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு உள்ள வட்டி மற்றும் தாமதக் கட்டணத்தை வருமான வரித்துறை உபரி வரியை திரும்பிக்கொடுக்கும் போது அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
புதிய வருமான வரித் தளம் அறிமுகம்
அனைத்திலும் புதுமை, மேம்பாடு என மோடி அரசின் திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரித் தளத்தில் பல குளறுபடிகள், பிரச்சனைகள் இருந்தது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் தொடர் கண்காணிப்பு மற்றும் கோரிக்கை அடிப்படையில் இத்தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்த்து வருகிறது.
ஏகப்பட்ட பிரச்சனை
ஆனால் மக்கள் மத்தியில் இன்னும் வருமானம் வரித் தளம் மெதுவாக இயங்குவதாக, பல சேவைகள் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாகப் பார்ம் 26AS தரவுகள் இன்னமும் வருமான வரித் தளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் மக்கள் கூறிவருகின்றனர்.
1 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்
புதிய வருமான வரித் தளம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்த பெரும்பாலான பிரச்சனைகளைத் தற்போது தீர்க்கப்பட்டு உள்ள காரணத்தால், தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்யத் துவங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 24 முதல்
சமீபத்தில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய வருமான வரித் தளத்தில் ஜூலை 24 முதல் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். அதிலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை இதன் எண்ணிக்கை 1,50,000 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
10 லட்சம் பேர் லாக்கின்
மேலும் புதிய வருமான வரித் தளத்திற்கும் ஜூலை 13 முதல் ஜூலை 28 வரையிலான இரண்டு வாரத்தில் மட்டும் தினமும் 10 லட்சம் பேர் லாக்கின் செய்வதாகவும், அதில் 10 சதவீதம் பேர் மட்டுமே தினமும் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இக்காலகட்டத்தில் சுமார் 5,50,000 படிவங்கள் புதிய வருமான வரித் தளத்தில் வரி தாக்கல் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் பணம் வீண்
புதிய வருமான வரித் தளத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு வருமான வரித் தளம் உருவாக்கக் கொடுக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் வீண் என மக்கள் டிவிட்டரில் டிவீட் செய்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு புதிய வருமான வரித் தளத்திற்கு எவ்வளவு பணம் தொடுத்தது எனத் தெரியவந்துள்ளது.
இன்போசிஸ் பணம்
மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் மாநில நிதியமைச்சரான பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்த தரவுகள் படி புதிய வருமான வரி தளத்திற்காக மட்டும் மத்திய அரசு இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஜனவரி 2019 முதல் ஜூன் 2021 வரையில் 164.5 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.
ஈபைலிங் தளம்
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் நிறுவனம் ஈபைலிங் மற்றும் Centralized Processing Centre 2.0 திட்டத்தை ஓப்பன் டென்டர் வாயிலாகவே பெற்றது.
இன்போசிஸ்
இந்த ஒப்பந்தம் கைப்பற்றியதன் மூலம் இன்போசிஸ் குறைந்த விலையில் அரசுக்குச் சேவை அளிக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 164.5 கோடி ரூபாய் தொகையில் தான் மொத்த ஈபைலிங் மற்றும் Centralized Processing Centre 2.0 தளத்தை இன்போசிஸ் உருவாக்கியுள்ளதா என்றால் கட்டாயம் இல்லை.
8.5 வருட திட்டம்
மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனவரி 16, 2019ல் ஈபைலிங், Centralized Processing Centre 2.0, MSP-கான பேஅவுட், ஜிஎஸ்டி, வாடகை, போஸ்டேஜ் மற்றும் பிராஜெக்ட் மேனேஜ்மென்ட் செலவு என அனைத்திற்குமான திட்டத்தைச் செய்து முடிக்க இன்போசிஸ் நிறுவனத்திற்கு அடுத்த 8.5 வருடத்திற்கு 4,241 கோடி ரூபாய்க்கு அளித்தது. இதன் ஒரு பகுதி தான் ஜனவரி 2019 முதல் ஜூன் 2021 வரையில் 164.5 கோடி ரூபாயை மத்திய அரசு இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளது.