இந்தியாவில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாறி வரும் நிலையில் அரசு டெலிகாம் சேவை நிறுவனமான BSNL இன்னும் 3ஜி சேவை மட்டுமே அளித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீண்டும் லாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதற்காகச் சமீபத்தில் 1.64 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து பாரத் பிராண்ட்பேன்ட் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
இதேவேளையில் தற்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவை அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக டிசிஎஸ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
பிஎஸ்என்எல் 4ஜி
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்துடன் கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது.
16000 கோடி ரூபாய் டீல்
இந்த டீல் வெற்றிகரமான முடிந்தால் பிஎஸ்என்எல் - டிசிஎஸ் மத்தியில் 2 பில்லியன் டாலர் அதாவது 16000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
பிஎஸ்என்எல் - டிசிஎஸ்
பிஎஸ்என்எல் - டிசிஎஸ் நிறுவனங்கள் மத்தியில் விலை மற்றும் இதர வர்த்தகப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதன் மூலம் டாடா குழுமம் இந்தியாவில் முதல் முறையாகச் சொந்தமாக டெலிகாம் நெட்வொர்க் சொல்யூஷன்களை வழங்க உள்ளது. இதன் மூலம் உலக நிறுவனங்கள் உடன் டாடா குழுமம் போட்டிப்போட உள்ளது.
100000 டெலிகாம் டவர்கள்
இந்தத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன கூட்டணி மூலம் இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய 4ஜி சேவையை இந்தியா முழுவதும் இருக்கும் 100000 டெலிகாம் டவர்கள் மூலம் அளிக்க உள்ளது.
தேஜஸ் நெட்வொர்க்ஸ்
இதற்காகச் சமீபத்தில் டாடா குழுமம் கைப்பற்றிய தேஜஸ் நெட்வொர்க்ஸ் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய 4ஜி சேவைக்குத் தேவையான நெட்வொர்க் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 111 மில்லியன் வையர்லெஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
C-DoT மற்றும் டிசிஎஸ்
மத்திய அரசின் Centre for Development of Telematics (C-DoT) அமைப்பு டிசிஎஸ் உடன் இணைந்து கோர் 4ஜி சொல்யூஷன் மற்றும் ரேடியோ கருவிகளைத் தயாரித்துள்ளது. இது டெலிகாம் துறை மட்டும் அல்லாமல் பல துறையில் பயன்படுத்த உள்ளது.