இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கவும், வேலைத் திறனை அதிகரிக்கவும் ஹைப்ரிட் வொர்க் மாடல் குறித்துத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. கொரோனாவுக்கு முன்பு வரையில் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டியது கட்டாயமாக இருந்தது, அதிலும் சில நிறுவனங்களில் பாதுகாப்புக் காரணமாக Work From Home ஆப்ஷனே இல்லாமல் இயங்கி வந்தது.
ஆனால் அனைத்தையும் புரட்டிப்போட்டது கொரோனா தொற்று, 2020ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இருந்து இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் ஊழியர்கள் வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகிறார்கள்.
Work From Home முறை
இந்த Work From Home முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி அடைந்த நிலையில் பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஹைப்ரிட் வொர்க் மாடலை நடைமுறைப்படுத்துவதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது, இதில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ்-ம் ஒன்று.
ஹைப்ரிட் வொர்க் மாடல்
ஹைப்ரிட் வொர்க் மாடல் என்பது ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுவார்கள், மற்ற ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள். இல்லையெனில் ரொடேஷன் முறையில் ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்வார்கள்.
டிசிஎஸ்-ன் முடிவு
இதை நிரந்தர வொர்க் மாடலாக டிசிஎஸ் முதல் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து முக்கியமான அறிவிப்பை தற்போது டிசிஎஸ் வெளியிட்டுள்ளதால் டிசிஎஸ் ஊழியர்கள் குஷியாகியுள்ளனர். அப்படி என்னப்பா சொல்லிட்டாங்க..?
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காரணமாகக் கடந்த 1.5 வருடமாக ஐடி ஊழியர்கள் வீட்டில் (சொந்த ஊரில்) இருந்து பணியாற்றுவதில் இருக்கும் நன்மைகளை உணர்ந்து உள்ள இந்த வேளையில், தற்போது பகுதி பகுதியாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சொந்த ஊரில் இருந்து இறுகிய மனதுடன் வேலை செய்யும் நகரங்களுக்கு வரும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு இந்த அறிவிப்புக் கட்டாயம் பெரும் இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும்.
விஷன் 25/25
டிசிஎஸ் சமீபத்தில் 2021ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவித்தது எல்லோருக்கும் தெரியும், தற்போது 2025ஆம் ஆண்டுக்குள் தனது விஷன் 25/25 திட்டத்தைச் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
25 சதவீத ஊழியர்கள் மட்டும்
அதாவது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும், இதேபோல் உயர் அதிகாரிகள் 25 சதவீத பணி நேரத்தை மட்டுமே அலுவலகத்தில் செலவிட வேண்டும், இதேபோல் ஒவ்வொரு பிராஜெட்-லும் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும். இந்தத் திட்டம் தான் விஷன் 25/25.
டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் இந்த விஷன் 25/25 திட்டத்தை 2020 நிதியாண்டு நிதி அறிக்கை வெளியிடும் போது பேசினார், இத்திட்டம் குறித்துப் பல முறை பேசியும் உள்ளது. மேலும் தனது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இந்த வொர்க் மாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என அடுத்தடுத்த கூட்டத்தில் ராஜேஷ் கோபிநாதன் கூறினார்.
2025ல் விஷன் 25/25 திட்டம்
தற்போது டிசிஎஸ் இந்த விஷன் 25/25 திட்டத்தை 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாகச் செயல்படுத்தி முடிக்கத் திட்டமிட்டு உள்ள நிலையில், அதிகப்படியான ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் நிறுவனங்களுக்கும் பல வழிகளில் லாபம், நன்மை.
விப்ரோ, ஹெச்சிஎல்
மேலும் இது போன்ற வொர்க் மாடலை விப்ரோ, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்களும் திட்டமிட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும், அடுத்த ஒரு வருடத்திற்குள் அனைத்து ஐடி ஊழியர்களும் அலுவலகத்திற்கு வரவேண்டியது கட்டாயம் அதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இதன் பின்பு நிரந்தரமாக Work From Home பெறுவது ஊழியர்கள் கையில் உள்ளது.