இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பை பேக் திட்டத்தினை, வரும் டிசம்பர் 18 முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிஎஸ்இ-யில் இதன் பங்கு விலையானது கிட்டதட்ட 1% சரிந்து, 2,784.30 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது.
டிசிஎஸ் அதன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தைத் திருப்பித் தர ஏற்கனவே முடிவு செய்த நிலையில், 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மீண்டும் வாங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுக் கூட்டத்தில் ஒரு பங்குக்கு 3000 ரூபாய் என்ற வகையில் 5.33,33,333 கோடி பங்குகளைத் திரும்ப வாங்கத் தீர்மானிக்கப்பட்டது.
டாடா சன்ஸ் வசம் எவ்வளவு பங்கு?
டி.சிஎஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரரான டாடா சன்ஸ் நிறுவனம், இந்த பை பேக் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனம் டிசிஎஸ்ஸில் 72 சதவீத பங்குகள் கொண்டுள்ளது. இந்த பங்குகளை டி.சி.எஸ்க்கு விற்பதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனம் சுமார் 11,500 கோடி ரூபாயினை பெறலாம்.
எப்போது விண்ணபிக்க வேண்டும்?
அதோடு டிசிஎஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு 12 ரூபாய் ஈவுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆக இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு 324 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும் பங்குதாரர்கள் இந்த பங்கினை விற்க டிசம்பர் 15க்கு முன்பு விண்ணபிக்க வேண்டும். அப்படி விண்ணபிப்பவர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் டிசிஎஸ் அறிவித்துள்ளது.
இது தான் கடைசி தேதி
வரும் டிசம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள இந்த பைபேக் திட்டம், ஜனவரி 12, 2021 வரையில் அமலில் இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காக தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
லாபம் தான்
இதன் முதல் கட்டமாக, டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவிற்குப் பயனுள்ளதாகவும், பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக அமையும் என்றும் டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டத்தினால், பங்குதாரர்களுகு நல்ல லாபமே.