உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் ரெசிஷன் அச்சத்தின் காரணமாகச் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரித்தால் மட்டுமே பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவை சரி செய்ய முடியும் எனத் தீவிரமாக நம்புகிறது.
இதனால் லாபம் அளிக்காத வர்த்தகத்தை மூடுவது முதல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது முதல் அதிரடியாகப் பல நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் முதல் கட்டமாக எடுக்கும் நடவடிக்கை பணிநீக்கமாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த முன்னணி டெக் நிறுவனங்களின் பட்டியல் இதுதான்.
பைஜூஸ்
இந்தியாவின் முன்னணி மற்றும் அதிக மதிப்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கும் பைஜூஸ் அனைவருக்கும் கல்வி என்ற முக்கியமான சமூகத் திட்டத்திற்காகப் புட்பால் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி-ஐ பிராண்ட் அம்பாசிடர் ஆக சமீபத்தில் நியமித்தது.
லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி வந்த பின்பு பைஜூஸ் நிறுவனத்தின் அனைவருக்குமான கல்வி திட்டம் பிரபலம் அடைந்ததைக் காட்டிலும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 2500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு லியோனல் மெஸ்ஸி-ஐ நியமித்தது தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
மைக்ரோசாப்ட்
இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல கட்டங்களாக, பல பிரிவுகளில் இருந்து மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் 1000 த்திற்கும் அதிகமான ஊழியர்களை மைக்ரோசாப்ட் பணிநீக்கம் செய்துள்ளது.
ஸ்ட்ரைப்
அமெரிக்காவில் முன்னணி ஆன்லைன் பேமெண்ட் சேவை நிறுவனமாக இருக்கும் ஸ்ட்ரைப் கடந்த சில வாரத்தில் மட்டும் சுமார் 14 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 14 வார severance pay அளிப்பதாக அறிவித்துள்ளது.
பேட்ரிக் கொலிசன்
இந்த நிலையில் ஸ்ட்ரைப் (Stripe) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் கொலிசன் (Patrick Collison) ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் உயரும் பணவீக்கம், வளர்ந்து வரும் பொருளாதார மந்தநிலை பற்றிய அச்சங்கள், அதிக வட்டி விகிதங்கள், எனர்ஜி விலை உயர்வுக்கு மத்தியில் செலவுகளைக் குறைக்கவும் தொடர்ந்து லாபகரமாக இருக்க இதுபோன்ற பணிநீக்கம் அவசியம் என்பது போல் தெரிவித்துள்ளார்.
ஸ்னாப்சாட்
முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான ஸ்னாப்சாட் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் 1000-த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் நிதியியல் பிரச்சனை காரணமாக நிறுவனத்தின் வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்ய உள்ளதாக ஸ்னாப்சாட் இவான் ஸ்பீகல் தெரிவித்தார்.
நெட்பிளிக்ஸ்
ஸ்ட்ரீமிங் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நெட்பிள்க்ஸ் 2 சுற்றுகளில் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 450 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கொரோனா காலகட்டத்தில் அதிகப்படியான வருவாய் பெற்று வந்த நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள், வருவாய் தக்க வைக்கப் பெரும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
மெட்டா
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த சில வருடத்தில் தேவைக்கு அதிகமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த காரணத்தால் தற்போது லாபத்தில் கட்டாயம் வளர்ச்சியைக் காட்ட வேண்டும் என்ற நெருக்கடி காரணமாக 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 13 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளார்.
டிவிட்டர்
டிவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் கட்டாயம் லாபத்தை அடைய வேண்டிய நெருக்கடியில் இருக்கும் காரணத்தால் அடுத்தடுத்து உயர் அதிகாரிகள் வெளியேறிய பின்பும் சுமார் 50 சதவீத ஊழியர்களைத் தனது உலகளாவிய அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளார்.