கடந்த 30 வருடங்களில், குறிப்பாக 1991 எல் பி ஜி கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின், இந்தியாவின் முகத்தையே மாற்றிய, ஒரு சில துறைகளில் ஐடிக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்தியாவில் பெங்களுரு, ஹைதராபாத், போன்ற சில பெரு நகரங்கள், ஐடி கம்பெனிகளாலேயே படுபயங்கரமாக வளர்ந்து இருக்கின்றன. இப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.
தெலங்கானா அரசு, தன் மாநிலத்தில் ஐடி வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, ஐடி கம்பெனிகளை ஈர்க்க ஒரு புதிய யோசனையை களம் இறக்கி இருக்கிறது. அது என்ன யோசனை? வாங்க பார்க்கலாம்.
நிலம் அலுவலகம்
பொதுவாகவே ஐடி கம்பெனிகளுக்கு அரசு தரப்பில் சில சலுகைகளைத் தர வேண்டும் என்றால், நிலம் தான் முதலில் வரும். ஐடி கம்பெனிகளுக்கு நிலம் சார்ந்த செலவுகளைக் குறைக்கும் விதத்தில், தெலங்கானா அரசு, வாடகை இல்லா அலுவலக இடங்களைக் (Rent Free Office Space) கொடுக்க முன் வந்து இருக்கிறது.
யாருக்கு கொடுப்பார்கள்
இந்த வாடகை இல்லா அலுவலக இடங்களை, ஐடி கம்பெனிகளுக்கும், குறிப்பாக தெலுங்கு என் ஆர் ஐ ஆட்கள் நடத்தும் கம்பெனிகளுக்கு கொடுக்க இருக்கிறார்களாம். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கம்பெனிகள், இந்தியாவில் செயல்படும் கம்பெனிகளாக இருக்க வேண்டுமாம். எனவே தெலங்கானாவில் ஐடி நிறுவனங்கள் தங்களின் துணை நிறுவனங்களைத் தொடங்கச் சொல்கிறார்கள், தெலங்கானா அரசு அதிகாரிகள்.
எந்த ஏரியாக்களில் கொடுப்பார்கள்
தெலங்கானா அரசின் இந்த வாடகை இல்லா அலுவலக இடங்கள் (Rent Free Office Space), கரீம் நகர், கம்மம், நிஜாமாபாத், மெஹ்பூப் நகர், வாரங்கள் போன்ற பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஐடி டவர்களில் கொடுக்க இருக்கிறார்களாம். இந்த டயர் 2 நகரங்களில் ஒட்டு மொத்தமாக சுமார் 50,000 சதுர அடிக்கு, அலுவலக இடங்களைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.
ஹைதராபாத் கம்பெனிகள்
புதிய கம்பெனிகள் ஒரு பக்கம் வருவது இருக்கட்டும். ஏற்கனவே ஹைதராபாத்தில் இருக்கும் கம்பெனிகளையும், இந்த டயர் 2 நகரங்கள் பக்கம் திருப்பும் வேலையில், தெலங்கானா அரசு இறங்கி இருக்கிறது. தெலங்கானாவில் Telangana Academy for Skill and Knowledge (TASK) என்கிற திட்டம் வழியாக, மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கும் நல்ல வாய்ப்பு
தமிழகமும், தெலங்கானா மாநிலத்தைப் போல, ஐடி மற்றும் ஐடி சார்ந்த கம்பெனிகளை ஈர்க்க திட்டங்களைத் திட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழகத்திலும் ஐடி கம்பெனிகள் கணிசமான அளவுக்கு அதிகரிக்க வேண்டும். தமிழக அரசு, இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, களத்தில் இறங்கும் என எதிர்பார்ப்போம்.