கொரோனாவால் ஒட்டுமொத்த இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில், பல துறையினர் தங்களது வருவாயினை இழந்து தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள், தொழில் சாலைகள் வருவாயின்றி முடங்கிக் கிடக்கும் நிலையில், அதிகரித்து வரும் செலவினங்களையும், இழப்பினையும் குறைக்க சம்பள குறைப்பு, பணி நீக்கம் என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் பெரும்பாலான தனியார் ஊழியர்கள் தங்களது சம்பளத்தினையே இழந்து வருகின்றனர். இது தற்போது அரசு ஊழியர்களையும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது எனலாம்.
அரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு
மூன்றாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா அரசு தனது ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பள குறைப்பினை மே மாதத்தில் தொடர முடிவு செய்துள்ளதாக லைவ் மின்ட் செய்திகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மட்டும் அல்ல, ஏறத்தாழ பெரும்பாலான மாநில அரசுகளும் வருவாயின்று தவித்து வருகின்றன.
அரசுக்கு பிரச்சனை தான்
ஏனெனில் நாடு முழுவதும் தொடர்ச்சியான லாக்டவுன் காரணமாக, மாநில அரசுகள் முழுமையாக தங்களது வருவாயினை இழந்துள்ளன. இது குறித்து வெளியான செய்தியில், ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டால், செலவு 3000 கோடி ரூபாய்க்கு மேல் செல்லும். இதனால் அரசு மேலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். பின் எதற்கும் அரசால் பணம் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
சம்பள குறைப்பு
ஆக தெலுங்கானா அரசு பொது பிரதி நிதிகளுக்கு 75 சதவீத சம்பள குறைப்பினையும், அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பள குறைப்பும், இதே மாநில அரசின் ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பள குறைப்பும் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது மட்டும் அல்ல ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு 25 சதவீதம் குறைப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தொகையும் இனி கட்
இதே அரசு பணிகளை அவுட்சோர்ஸிங்க் செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10 சதவீத சமபள குறைப்பும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 1,500 ரூபாய் பணத்தினை செலுத்த வேண்டாம் எனவும் தெலுங்கான அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலவச அரிசி உண்டு
எனினும் அரசு மூலம் வழங்கப்படும் இலவச அரிசி மே மாதத்தில் 12 கிலோ அரிசி வழங்கல் தொடரும் என்றும், சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களை எந்த வித மாற்றமும் இல்லாமல் செலுத்தவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் மாநிலத்துக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் 12,000 கோடி ரூபாய் வருமானம் லாக்டவுனினால் கிடைக்கவில்லை. மே மாதத்தில் வெறும் 3,100 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
வருமானம் அதிகரிக்கவில்லை
மேலும் லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், வருவாய் அதிகரிக்கவில்லை என்று தெலுங்கான அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆக இந்த குறைந்த வருமானத்தில் தான் அரசு எல்லாவற்றையும் பூர்த்தி செய்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications