இந்தியாவில் கடந்த சில வருடங்களில் மிகப்பெரிய அளவிலான வருவாய் பாதிப்பைச் சந்தித்த டெலிகாம் நிறுவனங்கள் கொரோனா பாதிப்பு நிறைந்து காணப்பட்ட மார்ச் காலாண்டில் 15 சதவீத கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.
நாடு முழுவதும் வர்த்தகச் சந்தை முடங்கிடக்கும் இந்தச் சூழ்நிலையில் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்கள் வர்த்தகப் பாதிப்பு, வருவாய் பாதிப்பு சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மட்டும் அதிகளவிலான வருவாய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன்
மார்ச் காலாண்டில் கடைசியில் தான் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முன்னரே இந்தியாவில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டது. இதனால் சாமானிய மக்களின் டேட்டா பயன்பாட்டு அளவு அதிகமானது.
இதோடு லாக்டவுன் செய்யப்பட்ட பின்பு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்த காரணத்தால் பொழுதுபோக்கிற்காக அதிகளவிலான டேட்டா பயன்படுத்தியுள்ளனர்.
டேட்டா பயன்பாடு
மக்களின் இந்தத் திடீர் டேட்டா பயன்பாடு அதிகரிப்பின் மூலம் நாட்டின் 3 முன்னணி நிறுவனங்களும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுக் கடந்த காலாண்டைக் காட்டிலும் மார்ச் காலாண்டில் 15 சதவீத அதிக வருவாய் பெற்றுள்ளது.
வருவாய் அளவு
செல்லுலார் ஆப்ரேஷன்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் பார்தி ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்கள் சராசரியாக ஒரு வாடிக்கையாளருக்கு டிசம்பர் காலாண்டில் 124 ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டியிருந்தது.
ஆனால் மார்ச் காலாண்டில் இது 140 முதல் 145 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு வாடிக்கையாளருக்கு கிட்டதட்ட 20 ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.
இதேபோல் மார்ச் காலாண்டில் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
600 கோடி ரூபாய்
மேலும் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் இக்காலக்கட்டத்தில் குறைந்த கட்டணத்திற்கு அதிகளவிலான டேட்டா-வை கொடுத்துள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் இருக்கும், இது கொடுக்கவில்லையெனில் டெலிகாம் நிறுவனங்கள் இன்னும் அதிகமான வருவாய் பெற்று இருக்கும் என COAI அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்பார்ப்பு
மேலும் இந்த வருடத்தின் இறுதிக்குள் டெலிகாம் நிறுவனங்கள் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் சராசரி வருவாய் 180 ரூபாய் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டெலிகாம் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் ஒரு முக்கியமான பிரச்சனை உள்ளது.
பிரச்சனை
டெலிகாம் நிறுவனங்களுக்கு இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று உள்ளது. ஆம், AGR பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைத்து டெலிகாம் நிறுவனங்கள் உள்ளது. கொரோனா தாக்கத்தால் இப்பிரச்சனை தற்போது தணிந்துள்ளது, ஆனால் ஏப்ரல் 30க்கு பின் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் போது மீண்டும் இந்த பிரச்சனை மிகப்பெரியதாக வெடிக்கப்போவது உறுதி.