டெல்லி : ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா, ஜியோ மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு, மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவின் வருக்கைக்கு பின்னர், ஜியோவின் கடும் போட்டியை சமாளிக்க, மற்ற நிறுவனங்கள் பல சலுகைகளை கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு புறம் தங்களது லாபத்தை இதன் மூலம் விட்டுகொடுத்தாலும், மறுபுறம் பெரும் கடனாளிகளாகவும் மாறினர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அடுத்த ஆறு மாதங்களில் 40,000 வேலைகள் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பெருத்த அடி
இந்த அங்காளி பங்காளி சண்டையினால் ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் இந்த நிறுவனங்களுக்கு, மற்றொரு பேரிடியாய் வந்தி இறங்கியது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு. ஒரு புறம் கடனை அடைக்க முடியாமல், ஜியோவின் போட்டியையும் சமாளிக்க முடியாமலும் தவித்து வரும் இந்த நிறுவனங்களுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மேலும் பெருத்த அடியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் வோடபோன் பாதிப்பு
அதிலும் ஜியோவுக்கு போட்டியாய் களத்தில் நிற்கும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு, இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை நவம்பர் 14ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) கூடுதல் தெளிவுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏர்டெல் எவ்வளவு செலுத்த வேண்டும்?
ஏர்டெல் வட்டாரங்களில், ஏர்டெல் நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் 23.4 சதவிகிதம், 21,682 கோடி ரூபாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது எதிர்கால வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும், மேலும் இந்த தொகை குறித்தான எந்தவொரு கடிதமும் டெலிகாம் நிறுவனங்களிடம் இல்லாத நிலை உள்ளது. இதனால் முதலீட்டாளர்களிடத்தில் இது குறித்து எப்படி பதில் அளிப்பது என்ற தெளிவு இல்லாத நிலையே உள்ளது என்றும் கூறப்படுகிறது.
நிதி யுத்தம்
இது குறித்து கடந்த அக்டோபர் 24ம் தேதியன்று டோலாட் கேப்பிட்டல் அறிக்கையில், இந்த நிதி யுத்தமானது, பதவியில் இருப்பவர்களுக்கு பணம் செலுத்துதலை குறைக்கிறது.(வேலை குறைப்பு) இதே வோடபோன் ஐடியா அதன் இருப்பை வணிகத்தில் கவனிக்க நிர்பந்திக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையிலேயே பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும், இத்துறையின் முடிவின் தாக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வோடபோன் எவ்வளவு செலுத்த வேண்டும்?
வோடபோன் ஐடியா செலுத்த வேண்டிய தொகையானது 30.55 சதவிகிதம், 28,308 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஜியோவின் வருக்கைக்கு பின்னர் பெரிய அளவிலான இணைப்புகள் இழப்பு, மற்றும் பல ஊழியர்கள் வேலை இழப்புகள் என இருந்தது. எனினும் தற்போது தான் இந்த துறை சற்று மீண்டு வந்து கொண்டிருக்கிறது என்று எண்ணும் நேரத்தில், மீண்டும் இப்படி ஒர் இடி விழுந்துள்ளது. இது மீண்டும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை என்று இத்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பணியமர்த்தல் குறைந்துவிட்டது
கடந்த மூன்று ஆண்டுகளாகவே கணிசமாக பணியமர்த்தல் குறைந்து விட்டது. மேலும் மூத்த மட்டத்தில் எந்த பதவிகளும் மாற்றப்படவில்லை. இதனால் இந்தத் துறை திறமைக்கான கவர்ச்சியை இழந்தது என்றும், நடுத்தர மற்றும் ஜூனியர் மட்டத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும் இத்துறை சார்ந்த மனித வள ஆலோசகர் கூறியுள்ளார்.
நிலைமையை இன்னும் மோசமாக்கும்
உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு ஏற்கனவே நீடித்த கட்டணப் போர்களையும், அதிக கடன் சுமையையும் எதிர்த்துப் போராடும் பதவிகளின் சுமைகளை இன்னும் அதிகமாக்கியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே கட்டண போர்களை செய்து வரும் அவர்கள், அதிகளவிலான கடன் சுமைகளையும் சந்தித்துள்ளனர். இதனால் அவர்கள் லாபத்தை மேம்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர். இதனால் ஏற்கனவே இழப்பில் உள்ள நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் கதிகலங்கியுள்ளன.
ஐயூசி கட்டண பிரச்சனை
கடந்த சில வாரங்களுக்கு முன்பாகத் தான் இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஐயூசி பிரச்சனையை சந்தித்தன. இந்த பிரச்சனைக்கு ஒரு சுமூக தீர்வு காணும் முன்பே மீண்டும் இப்படி ஒரு பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற அடுத்தடுத்த பிரச்சனைகளால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வருமா? அப்படியே வந்தாலும், வேலையிழப்பு, கட்டணங்கள் அதிகரிப்பு இருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.