இந்த கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் என்னென்ன பிரச்சனைகள் தான் வரப்போகிறதோ தெரியவில்லை. இந்த லாக்டவுன் காலத்தில் வீட்டிலேயே முடங்கியிருந்தாலும், அவர்களில் பலர் ஸ்மார்ட்போனுடனேயே காலத்தினை நகர்த்தி வந்தது உண்மையே.
பலர் வீடியோ சாட்டிங், நண்பர்களுடன் அரட்டை, அண்டை நாடுகளில் உள்ள அலுவலகர்களுடன் வீடியோ காலில் மீட்டிங் இப்படி பல விதங்களில் பிசியாக இருந்தனர் எனலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டுரையில், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவதால், போக்குவரத்து செலவினங்கள் குறைந்துள்ளதாகவும், ஆனால் அதே நேரம் கம்யூனிகேஷன் செலவுகள் இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும் படித்தோம்.
அதிக கட்டணங்கள் விதிகப்படலாம்
அதனை உண்மை தான் என்று உணர்த்துகிறது டிராயின் இந்த அறிக்கை. ஏனெனில் இந்த லாக்டவுன் காலத்தில் ஜூம் மைக்ரோசாப்ட் டீம்ஸ் உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அண்டை நாடுகளுடனான சந்திப்பு, சர்வதேச அழைப்பு விகிதங்கள் என அனைத்தும் அதிகரித்துள்ளனவாம். இது அதிக கட்டணங்களை ஈர்க்கக்கூடும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
SMS மூலம் எச்சரிக்கை
இந்த வீடியோ அழைப்புகளுக்கும் ஐஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படலாம் என ஆபரேட்டர்கள் தங்கள் சந்தாதாரர்களை எச்சரிக்குமாறு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தவிட்டுள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எஸ் எம் எஸ் வழியாக எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன.
லேப்டாப் & கம்ப்யூட்டர் பயன்படுத்தினால் பிரச்சனையில்லை
டிராய் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக பல புகார்கள் வந்துள்ளனவாம். ஏனெனில் இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்து பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருவர் தனது லேப்டாப் அல்லது கணினியில் இருந்து ஆடியோவை பயன்படுத்தினால் அவர்களுக்கு எந்த வித பிரச்சனையும் இருக்காது.
மொபைல் நெட்வொர்க் இணைப்பு
ஆனால் வெளி நாடுகளுடன் தொடர்பு கொள்ள தங்களது வீடியோ கால் ஆப், மீட்டிங் ஆப்பினை தங்களது மொபைல் மூலம் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்களின் செல்லுலார் நெட்வொர்க் இணையும். இதனால் அவர்கள் ஐஎஸ்டி கட்டணத்தினை பெறலாம் என்கிறார்கள் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள்.
டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது
இது கடந்த ஆறு மாதங்களாகவே அதிகரித்துள்ளதாக தொலைத் தொடர்பு துறை கூறுகிறது. ஏனெனில் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள், வீடியோ கால், மீட்டிங் ஆப் மூலம் அலுவலக சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். அதோடு இது போன்ற ஆப்கள் பதிவிறக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் டேட்டா பயன்பாடும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சாதமாக பயன்படுத்திக் கொண்ட ஜியோ, ஏர்டெல்
இந்த வாய்ப்பினை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆன வெரிசோன் சமீபத்தில் வீடியோ கான்பிரன்சிங் சேவையான ப்ளூ ஜீன்ஸ் என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இதோடு ரிலையன்ஸ் ஜியோவும் ஜியோ மீட் என்ற பயன்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.