இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார் விற்பனையைத் துவங்க தீவிரமாக இருக்கும் டெஸ்லா நிறுவனம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கார்களுக்கு வரி சலுகையைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்யவும், கூட்டணி முறையில் டெஸ்லா கார்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தையை டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் யாருடைய கூட்டணியும் இல்லாமல் சொந்தமாக விற்பனை கடைகளைத் திறந்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது டெஸ்லா.
டெஸ்லா
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அமெரிக்கா, சீனா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் என உலகின் பல முன்னணி நாடுகளில் தனது டெஸ்லா கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்தியாவில் டெஸ்லா கார்களுக்குக் குறைந்த அளவிலான டிமாண்ட் மட்டுமே இருக்கிறது எனத் தெரிந்தும், டெஸ்லா விரும்பிகளுக்காகவே அறிமுகம் செய்ய முடிவு செய்தார் எலான் மஸ்க்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள்
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால், இந்தியாவில் டெஸ்லா வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவு எடுத்தார் எலான் மஸ்க். இதற்காகவே மத்திய அரசிடம் டெஸ்லா கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
டெஸ்லா நேரடி விற்பனை
இந்நிலையில் இந்தியாவில் விரைவில் விற்பனையைத் துவங்கக் காத்திருக்கும் டெஸ்லா, தனது கார்களை எவ்விதமான கூட்டணியும் இல்லாமல் நேரடியாக, தனது வாடிக்கையாளர்களுக்குச் சொந்த கார் ஷோரூம் மூலம் விற்பனை செய்ய எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது சாத்தியமா..? என்றால் கட்டாயம் முடியும்.
சிங்கிள் பிராண்ட் ரீடைல் ரூட்
இந்தியாவில் நேரடியாக விற்பனை அல்லது வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால் சிங்கிள் பிராண்ட் ரீடைல் ரூட் மூலம் செய்ய முடியும். ஆனால் இதற்குச் சில முக்கியமான அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளைக் கட்டாயம் டெஸ்லா பூர்த்தி செய்ய வேண்டும்.
இதற்கு முன்பு ஆப்பிள் மற்றும் IKEA ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்து நேரடி விற்பனையைத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் மற்றும் IKEA
சிங்கிள் பிராண்ட் ரீடைல் ரூட் முறையில் கீழ் தான் ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி தளத்தைக் கூட்டணி முறையில் அமைத்து ஆன்லைன் விற்பனையை நேரடியாகத் துவங்கியது.
இதேபோல் IKEA இந்தியாவில் பெரும் பகுதி உற்பத்தி பொருட்களை வாங்கும் காரணத்தால் ரீடைல் விற்பனையில் எளிதாக இறங்கியது. இதேபோலத் தான் டெஸ்லா-வும் இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி, பொருட்கள் கொள்முதல்
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் நேரடியாக விற்பனை மற்றும் வர்த்தகம் செய்ய வரும் போது, தத்தம் இந்திய நிறுவனத்தில் 51 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்றால் 30 சதவீத பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுப் பெற வேண்டும். அதாவது டெஸ்லா கார்களுக்கான உற்பத்தி பொருட்களில் 30 சதவீதம் இந்தியாவில் இருந்து பெற வேண்டும்.
3 நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா, இந்தியாவில் தனது கார் தயாரிப்புக்கான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கச் சோனா காம்ஸ்டார், சன்தார் டெக்னாலஜிஸ் மற்றும் பார்த் போர்ஜ் ஆகிய 3 நிறுவனங்களிடம் முக்கியமான எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிகல் உதிரி பாகங்களைத் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் 30 சதவீத அளவீட்டை டெஸ்லா எளிதாக ஈடுகட்ட முடியும்.
4 மாடல்களுக்கு அனுமது
இதற்கிடையில் மத்திய அரசு சமீபத்தில் டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் மாடல் Y மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்தின் 3 மாடல் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்திற்கும் மத்திய அரசிடம் இறக்குமதி வரிக் குறைப்பு குறித்துப் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னரே அனைத்து பணிகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளது.