உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாகத் திகழும் டெஸ்லா, எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும், அதன் செயல்பாட்டிலும் முன்னோடியாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான வேகம், ஆடம்பர கார்களில் இருக்கும் அதிநவீன வசதிகள் எனப் பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அளவிற்கு டெஸ்லா-வின் எலக்டரிக் கார்கள் சிறந்து விளங்குகிறது.
டெஸ்லாவின் நேரடி இந்திய விற்பனைக்காக மக்கள் காத்துக்கிடக்கும் இந்த வேளையில், இந்தியாவில் ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் முடிவிற்கு எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிர்வாகம் வந்துள்ளது.
இந்தியாவின் டெக் ஹப்-ஆக விளங்கும் பெங்களூரில், டெஸ்லா-வின் முதல் ஆராய்ச்சி அலுவலகத்தை அமைக்கக் கர்நாடகா அரசிடம் டெஸ்லா பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
டெஸ்லா
உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மிகப்பெரியது, அனைத்துத் துறை சார்ந்த டெக் வளர்ச்சியிலும் இந்தியர்கள் பணியாற்றி, சிறந்து விளங்கி வரும் வேளையில் இந்தியாவில் தனது ஆராய்ச்சி கூடத்தை அமைக்க முடிவு செய்துள்ளது டெஸ்லா.
கர்நாடக அரசு
செப்டம்பர் 10ஆம் தேதி அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கர்நாடக அரசிடம் ஆராய்ச்சி கூடத்தை அமைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆலோசனைக் கூட்டத்தை இந்த மாத இறுதிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் தனது டிவிட்டர் கணக்கில் ஜூலை மாதம் இந்தியாவிற்கு விரைவில் வருவோம் எனத் தெரிவித்திருந்தார். அப்போது பல லட்ச இந்திய மக்கள் டிவிட்டரில் மஸ்க்-ன் இந்த முடிவை வரவேற்றனர்.
இந்நிலையில் 2 மாத இடைவெளியில் டெஸ்லா இந்தியாவில் Research And Innovation centre அமைக்க முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
2வது நகரம்
டெஸ்லா மற்றும் கர்நாடக அரசு மத்தியில் நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக Research And Innovation centre அமைக்கப்படுவது பெங்களூரில் தான். டெஸ்லாவின் கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமெரிக்காவைத் தாண்டி தற்போது சீனாவில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்து ஆசியச் சந்தை தேவைகளையும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஐரோப்பியத் தொழிற்சாலை மூலம் ஐரோப்பியச் சந்தை சேவைகளையும் பூர்த்தி செய்ய உள்ளது.
பெங்களூரு
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் ஏற்கனவே பன்னாட்டு நிறுவனங்களான டயம்லர், பாஷ்ச், மஹிந்திரா எலக்ட்ரிக் ஆகியவை உள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனங்களான ஓலா எலக்ட்ரிக், சன் மொபிலிட்டி, ஏத்தர் ஆகிய நிறுவனங்களும் உள்ளது.
டெஸ்லா பெங்களூரில் தொழிற்சாலை அமைக்க முக்கியக் காரணமாக அமைந்திருப்பது, இந்தியாவிலேயே முதல் முறையாக எலக்ட்ரானிக் வாகன சட்டத்தை அமல்படுத்தியது பெங்களூர் தான். பெங்களூருக்கு அடுத்தப்படியாத தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் தனிப்பட்ட கொள்கைகளை அமைத்துள்ளது.
வெற்றி
டெஸ்லாவின் வருகை இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டிலும், எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா மற்றும் கர்நாடக அரசு மத்தியில் நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.