டெஸ்லா வாகனங்களை விற்பனை செய்யவும் இறக்குமதி வரியை குறைக்கவும் செய்தால் மட்டுமே இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனம் தொடங்குவோம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரியை குறைக்காவிட்டால் இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் திட்டம் இல்லை என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
இது குறித்த டுவிட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதின் கட்காரி
முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள், 'இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை என்றும், மின்சார கார்களை பொருத்தவரை இந்தியா பரந்த சந்தையை கொண்டது என்றும் கூறினார்.
இந்தியாவில் டெஸ்லா
மேலும் இந்தியாவில் அனைத்து மின்சார வாகன வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றும், டெஸ்லா நிறுவனம் விருப்பம் தெரிவித்தால் இந்தியாவில் அந்த நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்யலாம் என்றும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், இந்த வாகனங்களை ஏற்றுமதி செய்யலாம் என்றும் கூறினார்.
சீனாவில் உற்பத்தி
ஆனால் அதே நேரத்தில் சீனாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்துவிட்டு இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
தொழில்நுட்பங்கள்
இந்தியாவை பொருத்தவரை உதிரி பாகங்கள் அனைத்து வகையான தொழில் நுட்பங்கள் இருக்கின்றன என்றும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் உற்பத்தியை தொடங்கினால், இந்தியாவுக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கும் மிகப் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்தியாவில் முடியாது
இந்த நிலையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார் உற்பத்தியை தொடங்குவது குறித்த ஆலோசனை உள்ளதா? என டுவிட்டர் பயனாளி ஒருவர் கேட்டதற்கு, 'டெஸ்லா கார்களை முதலில் விற்பனை செய்யவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்காத வரை இந்தியாவில் எந்த இடத்திலும் கார் உற்பத்தி ஆலையை அமைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
வரி அதிகம்
மேலும் வாகனங்களை விற்பனை செய்வதற்கான இறக்குமதி வரி எந்த நாட்டிலும் இல்லாத அளவில் இந்தியாவில் அதிகம் என்றும் 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு அதிகமான மதிப்புள்ள கார்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியும், அதற்கு குறைவான கார்களுக்கு 60 சதவீத இறக்குமதி வரியும் இந்தியா விதிக்கிறது என்றும் தனது அதிருப்தியை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.