உலகின் மிக ஆபத்தான வேலைக்கு மிக அதிகமான சம்பளம் இருக்கும் என்பதுதான் அனைவரும் கருதும் ஒரு எண்ணமாக உள்ளது.
ஆனால் உலகின் ஆபத்தான வேலைக்கு மிகக்குறைந்த சம்பளம் இருக்கும் நிலையும் சில இடங்களில் உள்ளது.
பசிக்கு பயந்து தங்கள் உயிரை பணயம் வைத்து உலகின் ஆபத்தான வேலையை பார்க்கும் இந்தோனேஷிய சுரங்க தொழிலாளர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
உலகின் ஆபத்தான வேலை
உலகிலேயே மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்று சுரங்க வேலைகள் என்பதும், அதிலும் எரிமலை பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு சென்று வேலை பார்ப்பது என்பது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவோமா? என்ற உத்தரவாதம் இல்லாத வேலையாகும்.
ரூ.1000 மட்டுமே சம்பளம்
ஒவ்வொரு ஆபத்தான வேலைக்கும் உலக நாடுகள் அதிக சம்பளம் தரும் நிலையில் இந்தோனேஷியாவின் எரிமலை சுரங்கத்திற்குள் சென்று கந்தகம் எடுத்து வரும் வேலைக்கு அதிக சம்பளம் தருகிறது என்று நாம் நினைத்தால் அது உண்மை இல்லை. துரதிஷ்டவசமாக மிகக் குறைந்த ஊதியத்திற்கு இந்த அபாயகரமான வேலைகளை பலர் பார்த்து வருகின்றனர். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான். உயிரை பணையம் வைத்து எரிமலை சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு $12 மட்டுமே சம்பளமாக தரப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய் ஆகும்.
எரிமலை சுரங்கத்திற்குள் கந்தகம்
எரிமலை சுரங்கத்திற்குள் சென்று கந்தகதை எடுத்து வரும் தொழிலாளர்கள் தங்கள் உடல் எடைக்கு இணையாக கந்தகத்தை சுரங்கத்திலிருந்து சுமந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலையை செய்பவர்கள் பொதுவாக 50 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பது இல்லை என அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது.
200 பவுண்டு கந்தகம்
பெரும்பாலான சுரங்கத்தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுரங்கத்திற்குள் சென்று இரண்டு கூடைகள் அதாவது 200 பவுண்டு கந்தகத்துடன் வெளியே வரவேண்டும் என்பது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. இந்தோனேசியாவில் உள்ள இந்த எரிமலை சுரங்கத்திற்குள் கந்தகத்தை எடுக்கும் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் வேலை செய்வதை காணலாம்.
பசி
உயிரை பணயம் வைத்து வெறும் ஆயிரம் ரூபாய்க்கு ஏன் இந்த வேலையை பார்க்கிறார்கள் என்று கேள்வி கேட்டபோது அந்த ஊழியர்களில் ஒருவர் கூறியது 'பசி' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான். பசிக்கு பயந்து நாங்கள் உயிரை பணயம் வைத்து இந்த வேலையை செய்கிறோம் என்றும் நாங்கள் இந்த வேலை செய்தால் மட்டுமே எங்கள் குடும்பத்தினர் வயிறார சாப்பிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வறுமை
கந்தகத்தை சுமப்பதால் தோள் வீங்கிவிடும் என்றும் ஆனால் அதுவே நாளடைவில் எங்களுக்கு சகஜமாகி விட்டது என்றும் இது ஒரு ஆபத்தான வேலையாக இருந்தாலும் எங்கள் குடும்பத்தின் வறுமையை போக்குவதால் இந்த வேலையை தொடர்ந்து செய்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புகை
மேலும் சுரங்கத்துக்குள் சென்று கந்தகத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென புகை வந்தால் நம் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடி வர வேண்டும் என்றும், தப்பித்தவறி நமது உடலுக்குள் புகை சென்று விட்டால் குடலில் பயங்கரமான வலி ஏற்படும் என்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு
சுரங்கத்துக்கு சென்று உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பது துரதிஷ்டமான ஒரு விஷயமாகும். சுரங்கத்தின் உள்ளே வேலை செல்பவர்களுக்கு தண்ணீரில் நனைத்த துணியை மட்டுமே தருகிறார்கள் என்பதும் அந்த துணியை வாயில் கட்டிக்கொண்டு உள்ளே ரிஸ்க் எடுத்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.