ஐடி நிறுவனங்கள் சமீபத்திய காலமாக என்ன அறிவிப்பினை கொடுக்க போகின்றனவோ? இருக்கும் வேலை நிலைக்குமா? அல்லது எப்போது பணி நீக்கம் செய்யப்படுவோம்? அப்படி இருந்தால் அடுத்து என்ன செய்வது? வேலைக்கே பிரச்சனை எனும்போது, கடந்த ஆண்டை போல சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சலுகைகள் எல்லாம் அவ்வளவு தானா என்ற எண்ணம் நிச்சயம் எழுந்திருக்கும்.
ஆனால் மறுபுறம் ஐடி துறை சார்ந்த நிபுணர்கள். இது ஒரு சுழற்சி முறை தான். இது எப்போதும் வரக்கூடியது தான். ஆக நிச்சயம் விரைவில் இந்த நிலை சரியாகும் என்றும் கூறி வருகின்றனர்.
இணைந்த இரு ஐடி நிறுவனங்கள்
இப்படி ஒரு நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இந்திய ஐடி சந்தையானது இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் சில தினங்களுக்கு முன்பு நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களாக எல் & டி இன்ஃபோடெக் மற்றும் மைண்ட் ட்ரீ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அதிகரித்தன. இந்த நிறுவனங்கள் இணைந்தாலும் இன்னும் சேவையை சிறப்பாக செய்யலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும், மறுபுறம் இரண்டு நிறுவனங்களும் இணையும்போது, அவற்றின் ஊழியர்களின் நிலை என்னவோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மாற்றங்கள் இருக்குமா?
ஏனெனில் புதிய ஒரு நிறுவனம் ஒரு நிறுவனத்தினை வாங்கினாலே அதில் பற்பல அதிரடியான மாற்றங்கள் இருக்கலாம். குறிப்பாக ஊழியர்கள் மத்தியில் பெரும் மாற்றங்கள் இருக்கலாம். அப்படி இருக்கையில் முன்னணி ஐடி நிறுவனத்தோடு மற்றொரு நிறுவனம் இணையவுள்ளதாக கூறியிருந்த நிலையில், ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வளவு ஊழியர்களா?
இத்தகைய சூழலில் தான் எல் & டி குழுமம், மைண்ட் ட்ரீ நிறுவனத்தினை தன்னுடன் முழுமையாக இணைத்துக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இணைந்து செயல்பட பரிவர்த்தனை வாரியமும், அதன் நிர்வாகமும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கிடையில் இந்த நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 90,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எத்தனை வாடிக்கையாளர்?
தற்போது 750-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த குழுவானது சேவை அளித்து வருகின்றது. இந்த வெற்றிகரமான இணைப்பிற்கு பிறகு, இந்த நிறுவனம் சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவில் 5வது பெரிய ஐடி நிறுவனமாகவும் முன்னேறியுள்ளது. இதே வருவாய் அடிப்படையில் ஆறாவது பெரிய நிறுவனமாகவும் மாறியுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் ஆட்சேபனை இல்லை
இந்த இணைப்பிற்கு எந்த வாடிக்கையாளர்களும் கவலை தெரிவிக்கவில்லை. ஆனால் நிறுவனங்கள் இனி எப்படி செயல்படும். இனி திட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். அதேபோல முன்பை விட நாங்கள் இணைந்து எங்கள் சேவையை விரைவில், வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக முடித்துக் கொடுப்போம் என எல்டிஐமைண்ட்ட்ரீ -ன் தலைமை செயல் அதிகாரி தேபாஷிஸ் சாட்டர்ஜி மணிக் கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் இருக்குமா?
மேலும் இந்த பேட்டியில் பணி நீக்கம் ஏதேனும் இருக்குமா? இது பணி நீக்கத்திற்கு வழிவகுக்குமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சாட்டர்ஜி எங்களுக்கு இதுவரையில் அந்த எண்ணம் இல்லை. இந்த இணைப்பின் மூலம் எங்களது குழுவை சிறப்பாக பயன்படுத்துவோம். பணி நீக்கம் என்பது இல்லை என கூறியுள்ளார்.
அட்ரிஷனால் பிரச்சனையா?
அதேபோல அட்ரிஷன் விகிதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இப்போதைக்கு அப்படி ஏதும் இல்லை. மூத்த அதிகாரிகளும் யாரும் வெளியேறவில்லை. எனினும் இந்த கூட்டணியானது பல வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கும். அட்ரிஷன் என்பது சந்தையில் உள்ள சாதாரணமான விஷயம் தான். இதனால் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.