டெல்லி: கிரிப்டோ கரன்சியான பிட்காயினை இந்தியாவில் ஒரு நாணயமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இது குறித்து மக்களவையில் பிட்காயின் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் பிட்காயினில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்களையும் அரசு சேகரிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.
பிட்காயின் அறிமுகம்
கடந்த 2008ம் ஆண்டில் அடையாளம் தெரியாத குழுக்களால் பிட்காயின் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தலையீடுகள் ஏதும் இல்லாமல், அங்கீகரிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொருட்கள், சேவை பெறவும் பணப் பரிமாற்றத்துக்கும் பிட்காயின் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி
கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயினில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. பிட்காயினில் வர்த்தகம் செய்வது, பரிமாற்றம் செய்வது என பலவும் அதிகரித்துள்ளது.
இது குறித்து குளிர்காலக் கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த மசோதா மூலம் சில தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை கொண்டு வரப்படலாம். அதன் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் தான் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்க திட்டமில்லை என கூறியுள்ளார்.
மூலதன செலவு
மேலும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் 2.29 லட்சம் கோடி ரூபாயினை மூலதன செலவாக செய்துள்ளன. இது 2021 - 2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் தொகையான 5.54 லட்சம் கோடி ரூபாயில் 41% ஆகும். இது 2020 - 21ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 38% அதிகம் தான். இது நாட்டின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த செய்யப்பட்டுள்ளது.
ரூ.111 லட்சம் கோடி இலக்கு
இதற்காக மத்திய அரசு National Infrastructure Pipeline என்ற திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்காக அரசு 2020 - 2025ல் 111 லட்சம் கோடி ரூபாயினை செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. இது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த முடியும் எனவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
தொடர்ந்து விரிவாக்கம்
National Infrastructure Pipeline திட்டம் 6835 திட்டங்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 34 துறைகளில் 9,000 திட்டங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பணமாக்குதல் திட்டம்
இதே போன்று தேசிய பணமாக்குதல் திட்டம் (National Monetization Pipeline) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரயில்கள், விமான நிலையங்கள், சாலைகள் வரையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
There is no plan to recognize Bitcoin as a currency in India, Finance Minister/ இந்தியாவில் பிட்காயின் அங்கீகரிக்கபடுமா.. நிர்மலா சீதாராமன் சொல்வதென்ன.