வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது, மக்கள் அனைவரும் புதிய வருமான வரித் தளத்தைப் பயன்படுத்தப் பழகிக்கொண்டு இருக்கும் வேளையில் ஜூலை 1 முதல் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
மத்திய பட்ஜெட் அறிக்கையில் வெளியான அறிவிப்புகளின் அடிப்படையில், நிதியியல் கொள்கை 2021 கீழ் ஜூலை 1ஆம் தேதி சில முக்கிய வருமான வரி வரைமுறைகள் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதில் முக்கியமாக ஒன்று, யாரேனும் கடந்த 2 வருடத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தால் அவர்களுக்கு ஜூலை 1 முதல் டிடிஎஸ் (TDS) தொகையில் இரட்டிப்பு அளவீட்டைச் செலுத்த வேண்டும்.
இரட்டிப்பு TDS தொகை
நிதியியல் சட்டம் 2021 படி, வருமான வரி செலுத்துவோர் கடந்த இரண்டு வருடமாக வருமான அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் இருக்கும் பட்சத்திலும், அவர்களின் டிடிஎஸ் அளவு வருடத்திற்கு 50000 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் பட்சத்திலும் வருமான வரித்துறை டிடிஎஸ் தொகையில் இரட்டிப்பு அளவீட்டை வசூலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை 1 முதல்
இப்புதிய கட்டுப்பாடு வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுவதால், யாரேனும் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டுத் தாக்கல் செய்யப்படாத வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்திடுங்கள். இல்லையெனில் 50000 டிடிஎஸ் தொகைக்கு 100000 ரூபாய் வரையிலான டிடிஎஸ் தொகை செலுத்த வேண்டி வரும்.
சிறப்பு அனுமதி
இரட்டிப்பு டிடிஎஸ் தொகையை வசூலிக்கச் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் தயாரித்த நிதியியல் கொள்கை 2021ல் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிடிஎஸ் தொகை வசூல்
இந்தச் சிறப்பு அனுமதியின் கீழ் வருமான வரித் துறை, வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யாதவர்களிடம் 3 வகையில் டிடிஎஸ் தொகையை வசூலிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
1. இரட்டிப்பு டிடிஎஸ் தொகை அல்லது
2. இரட்டிப்பு வரி விகிதம் அல்லது
3. 5 சதவீதம் வரி அளவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் வருமான வரித்துறை கையில் எடுக்கும்.
கொரோனா தொற்றுக் காலம்
கொரோனா தொற்றுக் காலத்தைக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சகம் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய அதிகளவிலான கால அவகாசம் அளித்தது. இந்நிலையில் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யப்படாமல் இருப்பவர்கள் மீது தற்போது அதிகப்படியான இரட்டிப்பு டிடிஎஸ் தொகையை வசூலிக்கிறது.