உலகமே கொரோனாவால் தத்தளித்து வரும் நிலையில், மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுள்ள ஒரே துறை, ஐடி துறை தான்.
ஏனெனில் கொரோனாவிற்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்த நிலையில், ஒவ்வொரு துறையினரும் தங்கள் வணிகத்தினை டிஜிட்டல் மயமாக்க தொடங்கியுள்ளனர். முடிந்த அளவு ஒவ்வொரு வணிகத்திலும் டிஜிட்டல் பயன்பாட்டினை அதிகரித்து வருகின்றனர்.
இது இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க இதே நிலை தான். இதனால் ஐடி துறையினருக்கான தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் ஐடி துறையினருக்கு பல புதிய வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன.
தேவை அதிகரிப்பு
இது இப்படி எனில் டிஜிட்டல் மயமாகி வரும் டிஜிட்டல் துறைக்கு மத்தியில், டேட்டா, சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு என பல துறைக்களுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் நல்ல திறனுள்ள ஐடி ஊழியர்களுக்கான தேவை மிக அதிகரித்துள்ளதாக பணியமர்த்தும் நிறுவனங்கள் கூறுகின்றன.
கொரோனா காலத்திலும் ஐடி துறையில் பணியமர்த்தல்
பணியமர்த்தும் நிறுவனங்கள், டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்களுக்கான தேவையானது அதிகரித்துள்ளது. பணியமர்த்தல் என்பது முன்பை விட தற்போது 50 - 70% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன. கொரோனாவினால் ஐடி துறையில் நடந்த நல்ல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. கடந்த ஆண்டில் கொரோனா லாக்டவுன் காரணமாக பல துறைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்தன. பல ஆயிரம் பேர் தங்களது வேலையினை இழந்தனர். மாறாக ஐடி துறையில் பல ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர்.
திறனுள்ள ஊழியர்களுக்கு தேவை அதிகம்
ஏனெனில் உலககெங்கிலும் டிஜிட்டல் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வாய்ப்புகளும் மிக அதிகரித்துள்ளன. அதோடு நல்ல திறனுள்ள ஊழியர்களுக்கு, அதிக சம்பளம் கொடுக்க நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஏனெனில் தேவை வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக உள்ளது. ஆனால் தேவையான ஊழியர்கள் இல்லை என ரான்ஸ்டாட் இந்தியாவின் தலைவர் யேசாப் கிரி கூறியுள்ளார்.
ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சி
இதற்கிடையில் கடந்த ஆண்டில் பணியமர்த்தல், சம்பள உயர்வு, போனஸ் என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. பல நிறுவனங்களும் பல புதிய ஒப்பந்தங்களை போட்டுள்ளதாக அறிவித்தன. பல நிறுவனங்களின் attrition விகிதம் முந்தைய ஆண்டினை விட அதிகரித்துள்ளதாக காட்டின. அதிலும் நல்ல திறமைக்கான தேவை அதிகமாக உள்ளதாகவும், இது இன்னும் சில காலாண்டுகளுக்கு அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றன. மேலும் திறனுள்ள ஊழியர்களை சம்பளம் உயர்வு, போனஸ், சலுகைகள் என கொடுத்து தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்றன.
டிராப் அவுட்டும் அதிகமாகவுள்ளது
ஐடி துறையில் தற்போது பணியமர்த்தல் என்பது மிக உச்சத்தில் உள்ளது. ஆக ஊழியர்கள் பல சலுகைகளை பெறுகின்றனர். சிறந்த பதவிகளையும் பெற்று வருகின்றனர் என ஏபிசி கன்சல்டிங் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் ரத்னா குப்தா கூறியுள்ளார். அதே நேரத்தில் டிராப் அவுட் விகிதங்களும் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது 40 - 50% அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 10 வேலை சலுகைகளிலும், 4- 5 வாய்ப்புகள் நிராகரிக்கப்படுவதாக கிரி கூறியுள்ளார்.
நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களும் பணியமர்த்தல், அடுத்து வரும் சில காலாண்டுகளுக்கும் அதிகரிக்கும் என்று ஏற்கனவே கூறியுள்ளன. குறிப்பாக டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 1 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடியில் முக்கிய துறைகள்
இது டேட்டா, இணையம், கிளவுட் பொறியாளர்கள், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் டிரான்பர்மேஷன், ஆட்டோமேஷன் உள்ளிட்ட துறைகளில் அதிக தேவை உள்ளதாகவும், இந்த துறைகளில் 50 - 70% உயர்வுகள் உள்ளது. குறிப்பாக மேற்கண்ட இந்த தொகுப்புகளில் 30 - 35% பணியமர்த்தல் இருப்பதாகவும் கிரி கூறியுள்ளார்.