டெல்லி: சமீப காலமாக ஏடிஎம் இயந்திரங்கள், ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பும் வாகனங்களை திருடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.
அதற்கு சமீபத்தைய உதாரணமாக டெல்லியில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பும் வாகனம் திருடப்பட்டு இருக்கிறது.
எவ்வளவு ரூபாய் பணம் திருட்டுப் போனது..? திருடிய வாகனத்தை என்ன செய்து இருக்கிறார்கள்..? வாருங்கள் பார்ப்போம்.
ஏடிஎம் வாகனம்
வழக்கம் போல வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்ப ரொக்கப் பணத்துடன் வாகனம் புறப்பட்டு இருக்கிறது. டெல்லியில் துவாரகா செக்டார் 1 பகுதியில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பிய பின் தான் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.
வாகனம் காணவில்லை
துவாரகா செக்டார் 1 பகுதியில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்கு உள்ளே சென்ற இரண்டு அதிகாரிகள், பணத்தை நிரப்பிய பின் வெளியில் வந்து பார்த்து இருக்கிறார்கள். ஆச்சர்யம். ரொக்கப் பணத்தை வைத்திருக்கும் வாகனம், ஓட்டுநர் மற்றும் ரொக்கத்தை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு அதிகாரி என யாரையும் காணவில்லை.
வங்கிக்கு தெரியப்படுத்தல்
பதறிய அதிகாரிகள், வங்கிக்கு விவரத்தைச் சொல்லி இருக்கிறார்கள். ரொக்கப் பணத்துடன் வந்த வாகனம், ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என யாரையும் காணவில்லை என்பதை முறையாக தெரியப்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை வெளியான விவரங்களில், காணாமல் போன வாகனத்தில் 1.52 கோடி ரூபாய் பணம் இருந்ததாம்.
என்ன நடந்தது
துவாரகா செக்டார் 1 பகுதியில் காணாமல் போன வாகனத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அடித்து துன்புறுத்தி, வாகனத்தை மட்டும் திருடிச் சென்று இருக்கிறார்கள். திருடப்பட்ட வாகனம் வேறு ஒரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது.
பணம்
ஏற்கனவெ சொன்னது போல, திருடப்பட்ட ஏடிஎம் பண வாகனத்தில் 1.52 கோடி ரூபாய் இருந்தது. ஆனால் வாகனத்தை மீட்ட பின், அதில் 80 லட்சம் ரூபாய் மட்டும் காணவில்லை. ஆக 152 - 80 = 72 லட்சம் ரூபாய் வாகனத்திலேயே இருந்து இருக்கிறது. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து இதுவரை காவல் துறையிடம் இருந்து எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை.
நேர்மை
யாரோ புதிதாக திருட வந்து இருக்கிறார்கள் போல. தங்கச்சி திருமணம், தனக்கு என்று ஒரு வீடு, ஒரு குட்டி பிசினஸ் என கணக்கு போட்டு சரியாக 80 லட்சம் ரூபாயை மட்டும் திருடி இருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் அவர்களே மீண்டும் வங்கியிடம் பணத்தை திருப்பிச் செலுத்தினாலும் செலுத்துவார்கள் போல் இருக்கிறது.