இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாகத் திகழும் பஜாஜ் ஆட்டோ-வின் அவுரங்காபாத் தொழிற்சாலையில் ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகமான நிலையில் கடந்த 2 நாட்களில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதோடு சுமார் 140 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நிர்வாகத்திடம் இத்தொழிற்சாலையின் ஊழியர் அமைப்பு தொழிற்சாலையை 15 நாட்களுக்கு மூட கோரிவைத்துள்ள நிலையில், நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு மூலம் இந்தியாவில் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க துவங்கியது, ஆனால் பெரும்பாலான தொழிற்சாலையில் தொற்று அதிகமாகி வருகிறது.
பஜாஜ் ஆட்டோ
கொரோனா தொற்றுக் காரணமாக 3வது ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளார், இவர் தனிப்பட்ட முறையில் சிகிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இத்தொழிற்சாலையில் சுமார் 140 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 2 சதவீதத்திற்கும் குறைவான அளவு. மேலும் இதற்கு முன் இறந்த 2 ஊழியர்கள் BP மற்றும் சர்க்கரை வியாதி இருந்த நிலையில் கொரோனா தொற்று அவர்களின் உயிரைப் பறித்து எனத் தெரிவித்துள்ளது.
மேலும் ஊழியர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பும், திரும்பவும் பணிக்குத் திரும்ப உத்தரவாதமும் கொடுத்துள்ளனர் எனப் பஜாஜ் ஆட்டோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2 நாள் லீவ்
வெள்ளிக்கிழமை இத்தொழிற்சாலையில் 140 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு, 2 பேர் இறந்த நிலையில் சனிக்கிழமை தொழிற்சாலை முழுவதும் கிருமிநானிசி தெளிக்கப்பட்டு Santize செய்யப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
இந்நிலையில் திங்கட்கிழமை தொழிற்சாலை திறக்க நிர்வாகம் தயாராகும் நிலையில் ஊழியர்கள் அமைப்பு புதிய கோரிக்கையை வைத்துள்ளது.
6000 ஊழியர்கள்
இந்தத் தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியில் சுமார் 6000 பேர் பணியாற்றும் நிலையில், நிர்வாகம் எவ்வளவு தான் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தாலும், தற்போது தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ள, கட்டுப்பாட்டை இழந்து நிற்கிறது.
மேலும் ஒருவருக்குக் கொரோனா வந்தாலும், மொத்த குடும்பமும் பாதிக்கப்படும் காரணக்தால் தற்போது இத்தொழிற்சாலையைத் தொடர்புடைய 800 முதல் 1000 பேர் பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஊழியர்கள் அமைப்புக் கூறுகிறது.
15 நாள் மூடல்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சாலையில் தொற்று குறையும் வரையில் அதாவது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக 15 நாட்கள் தொழிற்சாலையை மூட கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்குத் தொழிற்சாலை நிர்வாக அதிகாரி ஒருவர்,"இந்த வைரஸ்க்கு உடனடியாகத் தீர்வு காண முடியாத நிலையில், இதனுடன் வாழ பழக வேண்டும். எவ்வளவு நாள் தொழிற்சாலையை மூடிவைப்பது" எனக் கூறியதாகப் பிஸ்னஸ் ஸ்டான்டர்டு தெரிவித்துள்ளது.