சென்னை: கடன் இந்த வார்த்தை உண்மையில் இனிப்பு நிறைந்த ஆனால் சாப்பிட்ட பின் கசக்கும் மோசமான மருந்து. இதை தேவையில்லாமல் சாப்பிட்டால் விளைவு மோசமாக இருக்கும்
அதாவது உதாரணமாக குடிகாரர்கள் பாஷையில் (மன்னிக்கவும் புரியும் மொழிக்காக) சொல்வதென்றால், ஒரு பீர் போதும் என்று நினைப்பவன் புத்திசாலி, ஒரு பீர் பத்தாது என்று இன்னொரு குவாட்டர் வாங்கி அடித்தால் அவன் நிச்சயம் ஏமாளி மட்டுமல்ல வேதனையை அனுபவிக்க போகின்ற கோமாளியும் கூட.
ஏனெனில் குடிபோதை அப்போதைக்கு ஏற ஏற மிகுந்த மகிழ்ச்சியை தரும் ஆனால் அடுத்த நாள் காலையில் போதை மிகுந்த வலியை தரும்.அப்படித்தான் கடன் பிரச்சனையும் எல்லோருக்குமே இருக்கும்.
வங்கிகள் உஷார்
நாம் கடன் எதற்கு வாங்குகிறோம். அதை அடைக்கும் சக்தி நமக்கு உள்ளதா, என்பதை அறிய பலரும் முனைவதில்லை. இன்றைக்கு மாத சம்பளம் வாங்குவோருக்கு அதுவும் குறைந்த பட்ச வேலை உறுதி உள்ள நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கே வங்கிகள் தனிநபர் கடனை வழங்குகின்றன.இதற்கு காரணம் பணம்திருப்பி செலுத்தாமல் போய்விடக்கூடாது என்பதற்காக
சொத்துக்கள் இழப்பு
சரி மற்றவர்கள் எல்லாரும் எப்படி கடன் வாங்குகிறார்கள். கந்துவட்டிக்குத்தான் அதுவும் எப்படி, 3 வட்டி, 5 வட்டி,. 10 வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இந்த கடன்களை அடைக்க சக்தி இருக்கிறதா என்பதை அறியாமல் சொத்து பத்திரங்களை கொடுத்தோ, வெற்று பத்திரங்களில் எழுதிக்கொடுத்தோ கடன் வாங்குகிறார்கள்.
கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை காரணமாக நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை இழக்கிறார்கள்.
அப்பாவி மக்கள்
கந்துவட்டிக்கு கடன் வழங்குவோர் இவர்களால் கட்ட முடியுமா முடியாத என்று பார்த்து கடன் வழங்காமல் முடிந்தவரை வட்டி வாங்கி அமுக்க வேண்டும். இல்லாவிட்டால் சொத்துக்களை வாங்கிவிட வேண்டும் என்று கடன் தருகிறார்கள். கந்துவட்டியில் உள்ள ஒரு பிரச்சனை என்னெவென்றால் மொத்தமாக பணத்தை திருப்பி தர வேண்டும் என்பார்கள். இதனாலேயே அப்பாவியான மக்கள் பணத்தை திருப்பி தர இயலாமல் சொத்துக்களை இழக்கிறார்கள்.
கடன் அடைத்தல்
எனவே கடனை உண்மையில் திருப்பி செலுத்த மாதம் ஒரு தொகை ஒதுக்க முடியுமா மற்றும் எத்தனை வருடங்களில் பணத்தை நாம் செலுத்த முடியும். நம் வருவாய் என்ன என்பதை நிச்சயம் யோசனை செய்து அதுதொடர்பான திட்டமிடல் வேண்டும். ஒருவேளை நாம் வாங்கும் கடன் வட்டி உள்ளிட்டவை நம்மால் அடைக்க முடியாது என்றால் வாங்காமல் விடுவதே சிறந்தது.
நகைக்கடன் பிரச்சனை
முடிந்தவரை சொத்து அடமான கடன் என்றால் வங்கியில் கடன் வாங்குங்கள்.வட்டி குறைவாக இருக்கும். நகைக்கடன் என்றாலும் பொதுத்துறை வங்கிகளை நாடி குறைவான வட்டியில் 33 பைசா வட்டியில் வையுங்கள். இல்லாமல் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் வைத்தால் சிக்கல் தான் . எப்படி என்றால் உங்களால் வட்டி சரியாக கட்ட முடியாவிட்டால் விரைவில் நகை ஏலத்துக்கு வந்துவிடும். அப்பாவி மக்கள் பலர் அளவுக்கு மீறி நகையின் பேரின் கடன் வாங்கி நகைகளை அடிமாட்டு விலைக்கு இழந்து வருகிறார்கள்.
மோசமான அனுபவம்
இன்னொரு முக்கியமான கடன் கிரிடிட் கார்டு கடன், இதற்கும் கந்துவட்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் கிரிடிட் கார்டில் மிகக்குறைந்த அளவில் கடன் வாங்கி இருந்தால் தப்பிப்பீர்கள். அதாவது உங்கள் மாத ஊதியத்தில் 10 சதவீதத்திற்குள் அதுவும் எப்படி, உங்களால் உடனே கட்டி விட முடியும் என்ற அளவுக்குள் வாங்கி இருந்தால் தப்பிக்க முடியும். ஆனால் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் பாதி வாங்கியிருந்தாலும் உதாரணத்திற்கு ஒரு லட்சத்தில் 50 ஆயிரம் வாங்கி இருந்தாலும் அதற்காக மாதம் சுமார் 3 ஆயிரம் ரூபாயை நீங்கள் வட்டி அபராதமாக செலுத்த வேண்டியது வரும்.
ஆபத்து வரும்
கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அந்தந்த மாதத்திற்குள் பணத்தை முழுமையாக கட்டிவிட வேண்டும். மினிமம் பணத்தை கட்டினால் மூன்றரை வட்டி மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது வரும். இந்த வகையில் சில ஆயிரங்களை மாதம் நீங்கள் இழக்க நேரிடும். எனவே. கிரிடிட் கார்டில் ஆபரில் வருகிறது என்பதற்காக வேண்டாத பொருட்களை வாங்கி குவித்து கடனில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
அவஸ்தை வரும்
எல்லாவற்றுக்கும் மேலான இன்னொரு விஷயம், இன்றைக்கு 25 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் வாங்கும் எல்லோருக்குமே தனிநபர் கடன் எளிதாக நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தருகின்றன. இந்த கடன்களை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் குறைவாக வாங்குங்கள். எளிதாக கிடைக்கிறதே என்பதற்காக வாங்கிவிட்டு பின்னால் கட்ட முடியாமல் அவஸ்தை பட தேவையில்லை.