தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியின் காரணமாக, தங்களை ஒருவரை ஒருவர் சிறந்தவர் என காட்டிக் கொள்ள தங்களது லாபத்தினையும் மறந்து, பல சலுகை மழையை பொழிந்தனர்.
ஆனால் தங்கள் கண் முன்னே உள்ள லாபத்தினையும் மறந்து செயல்பட்டனர். இதன் காரணமாக பெரும் நஷ்டத்தினை கண்டனர்.
ஆனால் பின்னர், அதற்கும் சேர்த்து கட்டணத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். எனினும் தற்போது வரையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல காரணங்களினால் அழுத்தத்தில் உள்ளன.
கட்டணங்களை அதிகரிக்க திட்டம்
ஆக மீண்டும் ஒரு கட்டண அதிகரிப்புக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன எனலாம். தற்போதே கட்டணம் அதிகம் என நீங்கள் உணர்ந்தால், நிச்சயம் வரும் புத்தாண்டில் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்படக்கூடும் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் வரவிருக்கும் புத்தாண்டில் கட்டணங்களை, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வொடபோன் & ஏர்டெல்லின் செம திட்டம்
ஆக வரவிருக்கும் புதிய ஆண்டில் சில நிறுவனங்களின் டேரிஃப்கள் உயரப் போகிறது. எகனாமிக்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, வோடபோன்-ஐடியா என்ற வீ நிறுவனம் (Vi) மற்றும் ஏர்டெல் ஆகியவை புதிய ஆண்டில் தங்கள் கட்டண விலையை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் உயரும் என எதிர்பார்ப்பு
இதற்கிடையில் வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஜியோவின் மாற்றத்தினை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் இந்த நிறுவனங்கள் அடுத்த ஆண்டில் நிச்சயம் கட்டண உயர்வை அமல்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல்லுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோவும் கட்டணத் திட்ட விலைகளை பற்றி யோசிக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டைப் போலவே, வொடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் புதிய கட்டணத் திட்டங்களை அறிவிக்கக்கூடும். ஆகஸ்ட் மாதத்திலேயே, CNBC யின் ஒரு அறிக்கை, கடந்த ஆண்டின் கட்டணத் திட்டங்கள் 10-40 சதவீதம் அதிக விலை கொண்டவை என்றும், இப்போது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை கட்டணத் திட்டங்களை மீண்டும் விலை உயர்ந்ததாக மாற்றத் தயாராகி வருவதாகவும் கூறியுள்ளது.
அர்பு விகிதம் எவ்வளவு?
கடந்த ஆண்டு டிசம்பரில் தான் வோடபோன் நிறுவனம் தனது கட்டணத்தினை உயர்த்தியது. அதிலும் ஜியோவின் வருகைக்கு பின்னர் இந்த நிறுவனம் முதன் முதலாக கடந்த ஆண்டு தான் கட்டணத்தினை உயர்த்தியது. தனியாரை சேர்ந்த மூன்று தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டிக் கொண்டு செயல்பட்டு வந்தாலும், செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, வொடபோன் நிறுவனத்தின் அர்பு விகிதம் 119 ரூபாயாகும். இதுவே பார்தி ஏர்டெல்லின் அர்பு விகிதம் ரூ.162, ஜியோவின் அர்பு விகிதம் 145 ரூபாயாகவும் உள்ளது.
நீடிக்க முடியாதவை
கட்டணங்கள் நீடிக்க முடியாதவை
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், தற்போதைய கட்டணங்கள் நீடிக்க முடியாதவை என்று வீ-யின் நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் முன்பு கூறியிருந்தார். ஆக வொடபோனின் இந்த கட்டண அதிகரிப்பு ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று தான். ஆக வொடபோனின் கட்டண அதிகரிப்பு விரைவில் இருக்கலாம். இதனைத் தொடர்ந்து ஏர்டெல்லும் அதிகரிக்கலாம். ஆனால் ஜியோ இதனை தொடருமா? என்பது தெரியவில்லை.
வாடிக்கையாளர்கள் இழப்பு
ஏனெனில் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை சேர்த்தது. ஆனால் வோடபோன் பல லட்சம் பேரை இழந்தது. அதோடு வொடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையிலும் உள்ளன. ஆக இதனை சமாளிக்கும் விதமாகவும், அடுத்த 5ஜி சேவைக்காக தங்களது முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். இதன் காரணமாக கட்டணங்களை உயர்த்துவதை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கட்டணங்கள் அதிகரிக்கும்
மறுபுறம், எஸ்பிஐ கேப்ஸ் ஆய்வாளர் ராஜீவ் சர்மாவும் தனது அறிக்கையில் மற்றொரு சுற்று கட்டண உயர்வு விரைவில் சாத்தியமாகும் என்று கூறினார். அடுத்த சில காலாண்டுகளில் மொபைல் கட்டணம் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.