இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை தரகு தளமான ஜீரோதா நிறுவனத்தின் தலைவரான நித்தின் காமத், சமீபத்தில் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்தது மூலம் பில்லியனர் தகுதிக்கு உயர்ந்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில், நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் அதிகளவிலான பாதிப்பை அடைந்துள்ள நிலையில், நித்தின் காமத் தனது டிவிட்டர் கணக்கில் மிக முக்கியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஜீரோதா நித்தின் காமத்
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த மோசமான நிலையில் இருந்து வெளிவர நாம் அனைவரும் பாடுபட்டு வரும் நிலையில், பெரு நகரங்களில் இருந்து மக்கள் சிறு நகரங்களுக்குச் செல்வது மூலம் இந்தியாவின் பல பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என்று நித்தின் காமத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பெரு நகரங்களில் அதீத பிரச்சனை
பெரு நகரங்கள் தற்போது மூச்சி திணறி நிற்கிறது. ஒவ்வொரு முறையும் பெரு நகரங்கள் சவால்களை எதிர்கொள்ளும் போது தோல்வி அடைந்து வருகிறது. தற்போது கொரோனா, இதற்கு முன்பு தண்ணீர் பிரச்சனை, காற்று மாசுபாடு, வெள்ளம், டிராபிக் இன்னும் பல..
பெரிய லாபம்
சிறு டவுன் மற்றும் கிராமங்களுக்கு நகரங்களில் இருக்கும் மக்கள் செல்லும் போதும் ஊரகப் பகுதிகள் வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் carbon footprint குறைக்க முடியும். அனைத்திற்கும் மேலாக மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை கிடைக்கும்.
ஜீரோதா ஊழியர்கள் மத்தியில் ஆய்வு
இந்நிலையில் நித்தின் காமத் தனது நிறுவனத்தில் செய்த ஆய்வில் சுமார் 49.1 சதவீதம் பேர் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றவும் அல்லது சொந்த ஊர் (Remote) இருந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இதேபோல் 42.6 சதவீதம் பேர் எதுவானாலும் ஓகே என்றும், 8.3 சதவீதம் பேர் அலுவலகத்திற்கு வர விரும்புவதாகத் தெரிவித்துள்ளதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நிர்வாகத்தில் மாற்றம்
இந்தச் சூழ்நிலையில் ஜீரோதா தற்போது நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவும், ஏற்கனவே வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்க ஆலோசனை செய்ய முடிவு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பெரு நகரங்களுக்கு வரும் மக்கள்
இந்த மாற்றத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பெரு நகரங்களுக்கு வருவதைத் தடுப்பது மட்டும் அல்லாமல் ஊரகப் பகுதிகளில் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியும் என ஜீரோதா நித்தின் காமத் தெரிவித்துள்ளார்.
எது சிறந்தது..?
ஜீரோதாவை போல் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கும் நிலையில், பெரு நிறுவனங்களும் சிறு நகரங்களுக்குத் தனது தலைமை அலுவலகத்தை மாற்றினால் இந்த மாற்றம் சிறப்பாக நடக்கும்.
இல்லையெனில் பெரு நகரங்களின் தலைவர்கள் சிறு நகரங்கள் அல்லது கிராமங்களில் நிரந்தரமாகத் தங்கி பணியாற்றத் துவங்கினால் இது சரியாக நடக்கும். ஆனால் இதை எத்தனை பேர் செய்வார்கள்..?
தமிழ்நாடு சிறப்பு
இந்தியாவில் அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களுக்கு வித்திடுவது தமிழர்கள் என்பது போல் இந்த விஷயத்திலும் தமிழன் சாதித்துள்ளான். ஊழியர்களைக் கிராமங்களுக்குச் செல்லுங்கள் என்பதை விட நிறுவனத்தைத் தலைவரே சிறிய கிராமத்திற்குச் சென்ற நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்துள்ளது.
ZOHO ஸ்ரீதர் வேம்பு
ஆம், சென்னையில் இருந்து உலகளவில் வர்த்தகம் மற்றும் டெக் சேவைகளை அளிக்கும் ZOHO நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு 2020 லாக்டவுன் அறிவிக்கும் போதே தென்காசி மாவட்டத்தில் இருக்கும் மத்தளம்பாறை என்கிற சிறிய கிராமத்திற்குத் தனது நிர்வாக அலுவலகத்தை முழுமையாக மாற்றியுள்ளார்.
இது சாத்தியமா..? உங்கள் பதில் என்ன..?
இவரைப் போல் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் பெரு நகரங்களில் இருந்து டவுன் மற்றும் கிராமங்களுக்கு மாற்றுவதன் மூலம் இந்த மாற்றத்தை எளிதாகவும், விரைவாகவும் மாற்ற முடியும். ஆனால் இது சாத்தியமா..?! பதிலை கமெண்ட்-ல் சொல்லுங்கள்.