மத்திய அரசு ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா முன்பணம் மற்றும் எல்டிசி என்ற இரு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த திட்டங்களின் மூலம் மத்திய அரசின் ஊழியர்களின் கையில் பணம் புழக்கம் அதிகரிக்கும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை.
இது விழாக்கால பருவத்தில் தேவையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு சற்று சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்களின் ஆலோசனை
பொதுவாக இது போன்ற விழாக்கால பருவங்களில் பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களுக்கு போனஸ், முன்பணம் கிடைக்கும், இதனை வைத்து இந்த விழாக்கால பருவத்தில் மக்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது வாடிக்கையான ஒரு பழக்கமே. இந்த நிலையில் கொரோனாவினால் முடங்கியுள்ள போயுள்ள பொருளாதாரத்தினை ஊக்குவிக்க, மக்கள் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்க வேண்டும் என்பது பல நிபுணர்களின் ஆலோசனையாக இருந்து வருகிறது.
தேவை அதிகரிக்கும்
இவ்வாறு பணப்புழக்கம் அதிகரித்தால், தேவை அதிகரிக்கும். செலவினங்கள் கூடும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நீடித்த நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான டைட்டன், ப்ளூ ஸ்டார், வேர்ல்பூல், வோல்டாஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலையானது 2% வரை ஏற்றத்தில் காணப்படுகின்றது.
கன்ஸ்யூமர் டியூரபில் குறியீடு
குறிப்பாக பிஎஸ்இ கன்ஸ்யூமர் டியூரபில் குறியீடு டாப் கெயினராகவும் உள்ளது. இந்த குறியீடானது 238 புள்ளிகள் அதிகரித்து 24,718 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய அமர்வில் 24,480 ஆக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க தக்கவிஷயம் என்னவெனில், சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் சற்று சரிவில் காணப்படுகின்றது.
மத்திய அரசின் அறிவிப்பு ஊக்கம்
கொரோனாவின் காரணமாக தேவை குறைந்து, விற்பனை சரிவினைக் கண்டிருந்த எலக்ட்ரானிக் நிறுவனங்கள், அரசின் இந்த நடவடிக்கையினால், விற்பனை அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையினால் ஏற்றம் கண்டு வருகின்றன. பொதுவாகவே பண்டிகை காலத்தில் இதன் விற்பனை அதிகரிக்கும் என்பதால், அதன் தாக்கம் இந்த பங்குகளில் இருக்கும். தற்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பு இன்னும் ஊக்கம் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.