2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரிய அளவிலான அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றமாக அமைந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாட்டு மாநில பட்ஜெட்-ஐ ஏதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இந்தப் பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் நிறைந்த பட்ஜெட் ஆக இருக்கும் எனக் கூறிய நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு இயங்கும் பிற மாநிலங்களும் இந்தப் பட்ஜெட் அறிக்கைக்காகக் காத்திருக்கிறது.
500 மின்சாரப் பேருந்துகள்
தமிழ்நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்த பல திட்டங்கள் தற்போது கையில் எடுக்கப்பட்டு உள்ள நிலையில் போக்குவரத்துத் துறையின் தொழில்நுட்பப் பிரிவான சாலைப் போக்குவரத்து நிறுவனம் (ஐஆர்டி) விரைவில் 500 மின்சாரப் பேருந்துகளை வாங்க டெண்டர் கோரவுள்ளது.
ஜெர்மன் வளர்ச்சி வங்கி
இந்த 500 மின்சாரப் பேருந்துகள் அதாவது எலக்ட்ரிக் பேருந்துகளுக்கான விவரக்குறிப்புகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன, விரைவில் இதற்கான ஏலங்கள் வெளியிடப்பட்ட உள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான மொத்த செலவில் சுமார் 80 சதவிகிதம் KfW (ஜெர்மன் வளர்ச்சி வங்கி) மூலம் நிதியளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு
ஏற்கனவே திட்டமிடப்பட்ட எலக்ட்ரிக் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இல்லாத நிலையில் இதை வாங்குவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கான ஒப்புதலைப் பெற்ற பின்னரே புதிதாகத் திட்டமிடப்பட்டு உள்ள 500 எலக்ட்ரிக் பேருந்துகளுக்கான ஏல நடைமுறை தொடங்கும். இந்த வழக்கின் விசாரணை அடுத்த 2 வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2,000 இ-பஸ்கள் வாங்கும் திட்டம்
2019-20 பட்ஜெட்டில், மார்ச் 2018 இல் லண்டனை தளமாகக் கொண்ட C-40 சிட்டிஸ் கிளைமேட் லீடர்ஷிப் குழுவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2,000 இ-பஸ்கள் வாங்கப்படும் என்று கூறப்பட்டது. KfW (ஜெர்மன் வளர்ச்சி வங்கி) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அரசு அறிவித்தது. ஆனால், 2,000 மின்சாரப் பேருந்துகளை வாங்க நிதி எதுவும் விடுவிக்கப்படவில்லை
பட்ஜெட் 2022
இ-பஸ்களை வாங்கும் திட்டம் 2020-21 பட்ஜெட்டிலும் இடம்பெற்ற நிலையில் இந்த நிதி ஒதுக்கப்படவில்லை, இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கட்டாயம் உறுதியான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.