இந்தியாவில் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்கள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக நிதி ஆயோக் தரவு கூறுகின்றது.
ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், அனைவருக்கும் குடிநீர், பாலின சமநிலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 115 பணிகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது.
அதன் படி, கடந்த 2020 & 2021 ஆகிய ஆண்டுகளுக்கான பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் இரண்டாவது இடம்
அதில் ஒட்டுமொத்த செயல்பாடுகளை பொருத்தவரை கேரள மாநிலம் 75 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், இமாச்சல் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் 74 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் இடம் பிடித்துள்ளன.
பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை
இதே பொருளாதார வளர்ச்சியில் இமாச்சல் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்த குஜராத் மற்றும் டெல்லி ஆகியவை சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியில் முன்னிலை
பொருட்கள் உற்பத்தியில் திரிபுரா ஜம்மு-காஷ்மீர் ஆகியவை சிறப்பாக செயல்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒடிசா மற்றும் அந்தமான் ஆகியவை சரியாக செயல்படுவதாகவும் நிதி ஆயோக் அமைப்பு வகைப்படுத்தி உள்ளது
வறுமை ஒழிப்பு
இந்த ஆய்வறிக்கையில் வறுமை இல்லை என்ற இலக்கினை அடையும் முயற்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன. டெண்டுல்கர் கமிட்டி மதிப்பீடுகளின் படி, நாட்டின் வறுமை விகிதம் 21.92% ஆக உள்ளது. தமிழகத்தில் வறுமை விகிதம் 11.28% என்றும் கணித்துள்ளது.
ஊரக வேலை வாய்ப்பு திட்டம்
இதே மற்றொரு குறிக்காட்டியான சுகாதார திட்டம் அல்லது ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும். இதில் 100% இலக்கில் தமிழ் நாடு 64% அடைந்துள்ளதாகவும், இதே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு 98.95% மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சந்தேகம் உண்டு
இதே போல் மாநிலத்தின் பிரதான் மந்திரி மாட்ரு வந்தனா யோஜனாவின் கீழ் பயனடைகின்ற பெண்களின் எண்ணிக்கை 88.42% ஆகும். எனினும் நிபுணர்கள் தமிழகத்தின் அறிக்கை சாதகமாக வந்துள்ளதாக கூறப்பட்டாலும், சில பிரிவுகள் சந்தேகம் கொண்டுள்ளதாக கூறுகின்றனர். ஏனெனில் கொரோனா காலத்தில் பலர் வேலையிழந்துள்ளனர்.
எப்படி முதலிடம்
பல குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழாக சென்றுள்ளன. அப்படியானால் எப்படி முதலிடத்திற்கு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் கிடைப்பது மாநிலத்தின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு கடன் எளிதில் பெற முடிந்தது. இங்கு 7 கோடி மக்கள் இருந்தாலும், 50% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும் வறுமையை ஒழிக்க பெண்கள் சுய உதவிக்குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடன் வழங்கல்
மாநிலத்தில் கிட்டதட்ட 6 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்கள் கிட்டதட்ட 1 கோடி உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த சுய உதவிக் குழுக்கள் கடந்த 2020 - 2021,ம் ஆண்டில் 50,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன. இதில் 30,000 கோடி ரூபாய் சிறு நிதி நிறுவனங்களாலும், 20,000 கோடி ரூபாய் வங்கிகளாலும் வழங்கப்பட்டுள்ள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கைகொடுத்த விவசாயம்
இவ்வாறு வாங்கப்பட்ட கடன்களில் பாதி தனிப்பட்ட செலவினங்களுக்கும், மீதம் விவசாயம் மற்றும் தொடர்புடைய செலவினங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டன. மேலும் கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்கும் மற்றும் சுய உதவி குழுக்களுக்கும் அரசு ஆதரவளித்தால், அரசு இன்னும் விரைவாக அபிவிருத்தி அடையும் எனவும் கூறுகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்ததா?
இது போன்ற அறிவிப்புகள் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும் என்றாலும், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்று மனித உரிமைகள் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் துணை இயக்குனரும், எஸ்டிஜியின் தமிழ் நாட்டின் உறுப்பினருமான தமிழரசி கூறியுள்ளார்.
எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை
ஏனெனில் தமிழ்நாடு அல்லது கேரளாவில் காணப்படும் வளங்கள், மற்ற மாநிலங்களில் இல்லாததால் மோசமான செயல்படும் மாநிலங்கள் உள்ளன. எனவே இயல்பாகவே தமிழ்நாடு மற்றும் கேரளா என்பது சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எனினும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தமிழரசி சுட்டிக் காட்டியுள்ளார்.