சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
ஆனால் இந்த விளம்பரங்கள் புகைபிடிப்பவர்களை பயமுறுத்தும் அளவுக்கு இல்லை என்றும் புகை பிடிப்பவர் மனதில் பதியும் வகையில் விளம்பரங்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வந்தன.
இந்த நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை விளம்பரங்கள் தோன்ற இருப்பதாக தகவல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சிகரெட் எச்சரிக்கை
சிகரெட் பிடிப்பது கேடு என்றும் சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த விளம்பரத்தை பார்த்த பிறகும் சிகரெட் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மட்டுமின்றி அதிகரித்து தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களுக்கு கோரிக்கை
சிகரெட் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும், திரைப்படங்களில் கூட பெரிய நடிகர்கள் சிகரெட் பிடிக்காமல் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது. என்பதும் தெரிந்ததே.
புதிய எச்சரிக்கை விளம்பரம்
இந்த நிலையில் அடுத்த கட்டமாக புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் இரண்டு பக்கமும் புதிய எச்சரிக்கை விளம்பரங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களை பார்க்கும் போதே சிகரெட் பாக்கெட்டை தொட வேண்டாம் என்ற எண்ணம் தோன்றும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிசம்பர் 1 முதல்
புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் விரைவில் புதிய சுகாதார எச்சரிக்கையுடன் வரும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, டிசம்பர் 1 முதல் புகையிலை பொருட்களின் பேக்கேஜிங்கில் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படும்.
இரண்டு பக்கமும் விளம்பரம்
சிகரெட் பாக்கெட்டுக்களில் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள் மற்றும் படங்கள் பேக்கின் இருபுறமும் பயன்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் 'புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது' என ஒரு பக்கத்திலும், இன்னொரு பக்கத்தில் 'புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையில் இறக்கின்றனர்" என்ற எச்சரிக்கை வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்கள்
மேலும் சிகரெட் பாக்கெட்டுக்களில் 1800-11-2356 என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் இந்த எண்கள் கருப்பு வெள்ளை எழுத்துருவில் இருக்கும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டால் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீங்கு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
விழிப்புணர்வு
இந்த புதிய விளம்பர எச்சரிக்கையின் மூலம், புகைபிடிப்பவர்கள் மற்றும் பிற புகையிலை பொருட்களைப் பயன்படுத்துபவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புகையிலை நுகர்வோர்கள் அதில் இருந்துவெளியேற உதவுவதற்காக அவர்களுக்கு ஆலோசனை சேவைகளுக்கான அணுகலை வழங்கவும் இது முயல்கிறது.
1.3 மில்லியன் இறப்பு
அரசாங்க தரவுகளின்படி, புகையிலை பயன்பாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த இறப்பை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.