டெல்லி: இந்தியாவின் தலை நகரான டெல்லியில், அரசியல் மட்டுமல்ல, காய்கறி விலைகளும் சூடு பிடித்துக் கொண்டு இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனவாம். இந்தியாவின் பல வகையான உணவு முறைகளிலும் தக்காளி ஒரு முக்கிய காய்கறி.
சைவம் சமைத்தாலும் சரி, கோழி அடித்து குழம்பு வைக்கும் அசைவமானாலும் சரி, தக்காளி இல்லாமல் குழம்பு வகைகள் எல்லாம் சிரமம் தான். வட இந்தியா, தென் இந்தியா என பாகுபாடே இல்லாமல், தக்காளி நம் இந்தியாவின் எல்லா ஊர் சமையலிலும் தேவையான காய்கறியாகத் தான் இருக்கிறது.
விலை நிலவரம்
இன்று (12 செப்டம்பர் 2020, சனிக்கிழமை) காலை, டெல்லி நகரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 80 - 85 ரூபாய்க்கு விற்கிறார்களாம் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. டெல்லியில் விற்கப்படும் தக்காளியின் விலை, ஏரியா மற்றும் தக்காளியின் தரத்தைப் பொருத்து சின்ன சின்ன மாற்றங்கள் இருப்பதாகவும் சொல்கிறது அந்த செய்தி.
பெரிய கடைகளில் விலை என்ன
கடந்த ஜூன் மாதம் முதலே, ஒரு கிலோ தக்காளி விலை நிலையாக 50 - 60 ரூபாய்க்கு விற்பனை ஆனதாம். Mother Dairy's ஒரு கிலோ தக்காளியை 78 ரூபாய்க்கு விற்கிறார்களாம். Grofers ஒரு கிலோ தக்காளியை 74 - 75 ரூபாய்க்கும், பிக் பாஸ்கெட், அதே ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய் வரைக்கும் விற்கிறார்களாம்.
மண்டியில் என்ன விலை
ஆசியாவின் மிகப் பெரிய காய்கறி மற்றும் பழ மண்டியான ஆசாத்பூர் மண்டியில் (Azadpur Mandi), ஒரு கிலோ தக்காளி 40 - 60 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம். திடீரென தக்காளியின் விலை, ஏன் இப்படி தீப் பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது?
தக்காளி வரத்து குறைவு
சந்தையில் விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து இருப்பதாக, ஆசாத்பூர் மண்டியில் இருக்கும் PPA Tomato Association தரப்பில் சொல்கிறார்கள். அதோடு தென் இந்தியா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் தக்காளி குறைவாக பயிரிட்டு இருப்பதாகவும் சொல்கிறது இந்த PPA Tomato Association.
தக்காளி விலை வீழ்ச்சி
கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தில், தக்காளியைப் பயிரிட்ட விவசாயிகள், ஒரு கிலோ தக்காளியை 1 - 2 ரூபாய்க்கு விற்றார்கள் என நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே தற்போது விவசாயிகள் குறைவாக தக்காளியை பயிரிட்டு இருக்கிறார்களாம். அதோடு கடுமையான மழையும் தக்காளி வரத்தை பாதித்து இருக்கிறதாம்.
15 நாட்கள்
டெல்லியில், தக்காளியின் விலை, அடுத்த 15 நாட்களுக்குள் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம் என்கிறது PPA Tomato Association. இந்தியா ஒரு ஆண்டில் 19.73 மில்லியன் டன் தக்காளியை உற்பத்தி செய்கிறதாம். அதில் 11.51 மில்லியன் டன் மட்டுமே நுகரப்படுவதாகச் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ்.