பொருளாதாரம், தொழிலாளர் சட்டம், மக்களின் நிம்மதி, கொரோனா தாக்கம் இப்படி பலவும் ஆம்பன் புயலை விட மிக மோசமாக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.
கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க பல்வேறு நாடுகளின் அரசுகளும் லாக்டவுனை நீட்டித்து வரும் நிலையில், இன்னும் பெரும்பாலான மக்கள் வேலையில்லாமல் வீடுகளுக்குள் தான் முடங்கிக் கிடக்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் சிலர் கொரோனா காலம் வரையில் வேலையில்லை என்றாலும், லாக்டவுனுக்கு பிறகு வேலைக்கு செல்லலாம். ஆனால் இந்த லாக்டவுன் காரணமாக பல நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தீவிர நடவடிக்கை
பெரும்பாலான பெரும் நிறுவனங்கள் கூட நஷ்டத்தினை கண்டு வருகின்றன. இதற்கிடையில் நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க ஊழியர்களைக் பணி நீக்கம் செய்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் சம்பளத்தினை குறைத்து வருகின்றனர். சில நிறுவனங்கள் சம்பளம் இல்லா விடுமுறையை கொடுத்து வருகின்றன. இப்படி சுற்றி பல அதிரடியான முடிவினை எடுத்து வருகின்றன. இதில் உலகின் பெரும் நிறுவனங்கள் கூட அடங்கும்.
ரோல்ஸ் ராய்ஸ் அதிரடி
மிக பிரபலமான பிரிட்டீஸ் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது 52,000 ஊழியர்களில் குறைந்தபட்சம் 9,000 பேரை பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் அதன் ஆண்டு செலவில் 1.3 பில்லியன் பவுண்டுகளை சேமிக்க முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அதன் விண்வெளி வணிகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினை சரிசெய்ய நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பணி நீக்கத்தில் பெரும்பாலும் சிவில் விண்வெளியில் இருக்கலாம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா பணி நீக்கம்
இதே போல பிரபலமான ஆன்லைன் வாகன சேவையினை வழங்கி வரும் ஓலா நிறுவனம், தனது மொத்த ஊழியர்களில் 25 சதவீதம் பேரை, அதாவது 1,400 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையினை, அதன் ஊழியர்களுக்கு அதன் மெயில் மூலம் அனுப்பியுள்ளதாக ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உபெர் நிறுவனம்
உபெர் நிறுவனம் கடந்த மே 18 அன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் உலகெங்கிலும் உள்ள டஜன் கணஜ்க்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் அதன் வாகன சேவை நிறுவனம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மாதத்தில் 3,700 பணியாளர்களை இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லிஃப்ட் நிறுவனம்
அமெரிக்காவினை சேர்ந்த டாக்ஸி சர்வீஸ் நிறுவனமான லிஃப்ட் நிறுவனம் 982 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது அதன் ஊழியர்களில் 17 சதவீதமாகும். அது மட்டும் இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு சம்பள குறைப்பையும் செய்துள்ளதாக இந்த நிறுவனம் கடந்த மாதமே அறிவித்தது.
ஹெல்த்கேர் நிறுவனமான க்யூர் ஃபிட்
ஹெல்த்கேர் ஸ்டார்டப் நிறுவனமான க்யூர் ஃபிட் நிறுவனம் அதன் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அதோடு பலருக்கு சம்பளத்தினையும் குறைத்துள்ளது. கொரோனா வைரஸினால் அதன் வணிகம் பாதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரை தளமாகக் கொண்ட நிறுவனம் சுமார் 500 ஊழியர்காளை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக்
பிரிட்டீஷ் விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் கடந்த மே 5 அன்று 3,150 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது. கொரோனா காரணமாக அதன் முழு விமான சேவையும் கிட்டதட்ட முடக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு கடுமையான முடிவினை எடுக்க இருப்பதாக தெரிவித்திருந்தது.
வீவொர்க் நிறுவனம்
ரியால்டி நிறுவனமான வீவொர்க் இந்தியா கொரோனாவினால் அதன் முக்கிய வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் பேரை ஜூன் முதல் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் வணிகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செலவுகளை குறைக்க இப்படி அதிரடியான நடவடிக்கையினை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சேமோட்டோவிலும் பணி நீக்கம்
நாட்டின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சேமோட்டோ தங்களது மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் பேரை, சுமார் 520 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும் தனது ஊழியர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 50% சம்பளத்தினை குறைத்துள்ளதாகவும், சோமேட்டோவின் தலைமை செயல் அதிகாரி தீபைந்தர் கோயல் கடந்த வாரத்தில் கூறியிருந்தார்.
ஸ்விக்கியும் அதிரடி முடிவு
உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தனது ஊழியர்களில் 1,100 பேர் வேலையிலிருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது அதன் மொத்த ஊழியர்கள் விகிதத்தில் 14 சதவீதம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துரதிஷ்டவசமாக இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்.
Airbnb Inc நிறுவனம்
ஏர்பின்ப் இன்க் (Airbnb Inc) நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களில் 25 சதவீதத்தினை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் உலகெங்கிலும் உள்ள ஏர்பின்ப் நிறுவனத்தில் சுமார் 1,900 ஊழியர்காள் பாதிக்கப்படுவார்கள் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் செஸ்கி மே 5 அன்று மெயில் மூலம் அதன் ஊழியர்களுக்கு அறிவித்தார். மேலும் அவர்களின் கடைசி நாள் அன்று மே11 ஆகத் தான் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது.
போயிங்க் நிறுவனம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமான இது, அது மொத்த ஊழியர்களில் கிட்டதட்ட 10 சதவீதம் பேரை அல்லது சுமார் 16,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தார். கொரோனா வைரஸின் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக அதன் ஊழியர்களுக்கு தன்னார்வ பணி நீக்கத்தினையும் கோடிட்டு காட்டினார்.
டிரிப் அட்வைசர் என்ன சொல்கிறது?
பயண நிறுவனமான டிரிப் அட்வைசர் உலகம் முழுவம் பயணத்திற்கு தேவையான சேவைகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் கொரோனாவினால் தங்களது வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இப்படி உலகம் முழுக்க பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை செலவினைக் குறைக்கும் விதமாக பணி நீக்கம் செய்து வருகின்றன.