இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதற்கும், சர்வீஸ் செய்வதற்கும் இந்திய அரசு அனுமதிக்காத நிலையில், இந்தியாவில் தனது உற்பத்தியை அமைக்காது என டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்து இந்தியாவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமாவால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அமைய வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டதாக கருதப்படுகிறது.
இந்தியாவில் டெஸ்லா
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை நிறுவுவதற்கு முயற்சிக்கும் வகையில் மனுஜ் குரானா என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் அமர்த்தப்பட்டார். அவர் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கார் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்யவும் மின்சார கார்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் பல முயற்சிகளை எடுத்து வந்தார்.
ராஜினாமா
இந்த நிலையில் திடீரென இந்தியாவில் தனது தொழிற்சாலையை அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வதாக டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அறிவித்ததை அடுத்து மனுஜ் குரானா ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தை
எலெக்ட்ரிக் கார்களுக்கான இறக்குமதி வரியை 100 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க மனுஜ் குரானா கடந்த 1 வருடத்திற்கு மேலாக இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்திய அரசு
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசு டெஸ்லா நிறுவனத்திற்கு எந்த சலுகையும் வழங்குவதற்கு முன்னர் அந்நிறுவனம் இந்தியாவில் கார்கள் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இந்தியாவில் கார் விற்பனை செய்யும் திட்டத்தை திடீரென டெஸ்லா நிறுவனம் நிறுத்தி வைத்தது. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஷோரூம் இடம் தேடும் முயற்சியையும் கை விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
மின்னஞ்சல்
இதனை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து மனுஜ் குரானா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இனிமேல் மனுஜ் குரானாவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரி செல்லுபடி ஆகாது என்றும் எதிர்காலத்தில் அவரது மின்னஞ்சல் ஐடியில் இருந்து எந்த மின்னஞ்சலும் நிறுவனத்திற்கு பெறப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மனுஜ் குரானாவின் ராஜினாமாவை அடுத்து இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொடங்கப்படும் திட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டெஸ்லா நிறுவனம் தனது கவனத்தை செலுத்தி வருவதாகவும், எந்த நாட்டில் சிறந்த வாய்ப்புகள் மற்றும் வசதிகள் இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் தாய்லாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் டெஸ்லா நிறுவனம் நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.