இந்தியாவில் இணையம் சார்ந்த சேவைகள் 1990களிலேயே வந்துவிட்டாலும், கடந்த சில வருடங்களாகத் தான் இணைய பாதுகாப்பு பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம்.
சரியான பதத்தில் சொல்ல வேண்டும் என்றால், டேட்டா பிரைவசி என்று சொல்லலாம்.
இந்த டேட்டா பிரைவசியை இந்தியா இதுவரை அத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் வேறு சில நாடுகள் இதை மிக சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாடுகள்
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எல்லாம், இந்த தனி மனித டேட்டா பிரைவஸியை கையில் எடுத்துக் கொண்டார்கள். பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி, கூகுள், ஆப்பிள் என எந்த ஒரு பெரிய நிறுவனமும், தங்கள் மக்களின் டேட்டா மற்றும் மக்கள் பற்றிய டேட்டாக்களில் கை வைக்கக் கூடாது என உரக்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
கூகுள்
சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையே, அமெரிக்காவின் காங்கிரஸின் முன், நேரில் ஆஜராகி, கூகுள் நிறுவனம் மக்களின் தரவுகளை தவறாகப் பயன்படுத்தவில்லை, இனியும் பயன்படுத்தாது என மணிக் கணக்கில் பதில் கொடுத்தார். உலகமே வாயைப் பிளந்து அவர் பதிலைக் கேட்டது.
ஒரு செயலி
இப்போது அதே கூகுள், டொடாக் (Totok) என்கிற ஐக்கிய அரபு அமீரக மக்கள் அதிகம் பயன்படுத்தும் மெஸேஜிங் அப்ளிகேஷனை தன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருக்கிறது. கூகுளைப் போலவே, ஆப்பிள் நிறுவனமும் தன்னுடைய ஆப்பிள் ஸ்டோரில் இருந்தும் டொடொக் மெஸேஜிங் செயலியை கழட்டி விட்டு இருக்கிறார்கள்.
என்ன சிக்கல்
இந்த டொடொக் என்கிற மெஸேஜிங் அப்ளிகேஷனைப், பெரும்பாலும் ஐக்கிய ஆரபு நாடு, இங்கிலாந்து, இந்தியா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த டொடொக் செயலியைப் பயன்படுத்துபவர்களின் தரவுகள் மற்றும் செயல்பாடுகளை, டொடொக் நிறுவனம், ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு பகிர்ந்து இருக்கிறார்களாம்.
நியூ யார்க் டைம்ஸ்
இந்த பிரச்னையை, அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, விசாரித்து விவரங்களைச் செய்திகளாக வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த செயலியை லட்சக் கணக்கான பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். பல நாடுகளில், இந்த டொடொக், டாப் 50 இலவச செயலிகளில் ஒன்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அவுட்
இந்த விவரங்கள் எல்லாம் தெரிய வந்த பின் தான் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம், தங்களுடைய ஆப் ஸ்டோர்களில் இருந்து கழட்டி விட்டு இருக்கிறார்களாம். அதோடு கூகுள் நிறுவனம், தங்களுடைய விதிமுறைகளை, டொடொக் செயலி மீறி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
பின்புலம்
இந்த டொடொக் செயலி நிறுவனத்துக்கும், அபுதாபியில் இருக்கும் ஹேக்கிங் நிறுவனமான டார்க் மேட்டருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. எனவே டார்க் மேட்டர் ஹேக்கிங் நிறுவனத்தையும் இப்போது விசாரித்து வருகிறார்களாம். TikTok-ஐயும், Totok-ஐயும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.