பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிஜிட்டல் இந்தியா மூலம் தற்போது டிஜிட்டலில் ஏராளமானோர் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தவறுதலாக வேறு வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பலர் அறிந்திருப்பதில்லை .
UPI மூலம் தவறுதலாக ஒரு கணக்கிலிருந்து வேறொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தற்போது பார்ப்போம்.
UPI பண பரிவர்த்தனை
UPI பண பரிவர்த்தனை என்பது தற்போது மிகவும் எளிதான ஒரு முறையாக உள்ளது என்பதும் ஸ்மார்ட்போன் உதவியுடன் ஒரு சில நொடிகளில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம் என்றும் தெரிந்ததே. UPI மூலம் பணத்தை அனுப்புவதற்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை என்பதால் ஏராளமானோர் இதனை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர்.
தவறுதலாக அனுப்பப்பட்ட பணம்
இந்த நிலையில் UPI மூலம் பணத்தை அனுப்பும் போது தவறுதலாக வேறு ஒரு நபருக்கு பணம் அனுப்பி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஒருவேளை நீங்கள் பணம் அனுப்பும் போது தவறுதலாக வேறொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் 24 மணி நேரத்திற்குள் அந்த பணத்தை திரும்ப பெறலாம் என்றும் அதற்கான வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
எஸ்எம்எஸ்
UPI மூலம் பணம் அனுப்பும் போது தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் உடனடியாக உங்களுக்கு பணப்பரிவர்த்தனை குறித்து வரும் எஸ்எம்எஸ்-ஐ சேமிக்க வேண்டும். அந்த எஸ்எம்எஸ்-ஐ நீங்கள் டெலிட் செய்துவிட்டால் பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் அந்த எஸ்எம்எஸ்-இல் பரிவர்த்தனை உறுதி செய்யப்பட்டதன் பிபிஎல் எண் இருக்கும். பணத்தை திரும்ப பெறுவதற்கு பிபிஎல் எண் கண்டிப்பாக தேவைப்படும்.
இணையதளம்
நீங்கள் தவறுதலாக வேறு ஒரு நபருக்கு பணத்தை அனுப்பி விட்டால் உடனடியாக bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும். இந்த செயல்முறைக்கு பின்னர் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பத்தில் உங்கள் வங்கிக்கணக்கு எண், பெயர், தவறுதலாக பணம் அனுப்பப்பட்ட வங்கிக்கணக்கின் முழு விவரங்களை அளிக்க வேண்டும்.
ஹெல்ப்லைன் எண்கள்
மேலும் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஹெல்ப்லைன் எண்கள் மூலமும் புகார் அளிக்கலாம். ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து தவறான பணப்பரிவர்த்தனை குறித்த முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
மேலாளரிடம் புகார்
மேலும் வங்கியின் கிளைக்கு நேரில் சென்று மேலாளரிடம் இதுகுறித்து புகார் அளிக்கலாம். மேற்கண்ட வழிமுறைகளை செய்தால் தவறான வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணம் இரண்டு நாட்களில் உங்களுக்கு திரும்பி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.