சமீப காலமாக கிரிப்டோகரன்சிகளில் நிலவி வரும் போக்கு இனி முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தளவுக்கு கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன.
குறிப்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் மிக நம்பிக்கையான முதலீடாக பார்க்கப்பட்ட பிட்காயின், மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
இன்னும் சில தரப்பு கணிப்புகள், பிட்காயின் இன்னும் சரியலாம் என்றே கூறி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், அதற்கேற்ப கிரிப்டோகரன்சிகளும் குறைந்து வருகின்றன.
மூன்று பக்கமும் அடி
இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகள் மூன்று பக்கமும் அடி வாங்கி வருகின்றன எனலாம். இது ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய விதிகளுக்கு மத்தியில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் முதலீடுகளில் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளனர். சில முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுவும் கிரிப்டோகரன்சி சந்தையானது மீண்டும் தொடர்ந்து சரிவினைக் காண முக்கிய காரணம் எனலாம்.
அடுத்த கட்ட வளர்ச்சி
எனினும்அரசின் இந்த நகர்வுகள் கிரிப்டோகரன்சி சந்தையினை, அடுத்தகட்ட வளர்ச்சியினை நோக்கி எடுத்து செல்லத் தொடங்கியுள்ளன. ஆக புதிய மாறுதல்களுடன் கிரிப்டோகரன்சிகள் நிலை பெறலாம் என்றும் கூறுகின்றனர்.
பாதியாக குறைந்த டர்ன் ஓவர்
கடந்த ஜனவரி - மார்ச் மாதம் வரையில் இந்தியாவில் உள்ள மூன்று முக்கிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்-களான WazirX, CoinDCX மற்றும் Bitbn-களின் தினசரி டர்ன்ஓவர் 110 மில்லியன் டாலராகும். இது கிரிப்டோகரன்சிகளின் பரிவர்த்தனைக்கு வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாதியாக குறைந்து 54 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ஜூலை 1-க்கு பிறகு ரொம்ப மோசம்
ஜூலை 1க்கு பிறகு கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் 1% டிடிஎஸ் செலுத்த வேண்டும் என்று அமல்படுத்தப்பட்டது. இதன் பிறகு கிரிப்டோகரன்சிகளில் டர்ன் ஓவர் 23.5 மில்லியன் டாலராகவும் குறைந்துள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணிகள் காரணமாக உள்ளதாக நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
3 முக்கிய காரணங்கள்
பெரும்பாலான மத்திய வங்கிகள் பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது பணப்புழக்கத்தினை கட்டுப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சரிந்து வந்த பொருளாதாரத்தினை மீட்க அதிகளவிலான பணப்புழக்கத்தினை மத்திய வங்கிகள் செலுத்தின. அந்த சமயத்தில் தான் கிரிப்டோகரன்சிகள் இந்தியாவில் வளர்ச்சி காண ஆரம்பித்தன.
தற்போதைய நிலையே வேறு
எனினும் தற்போது அந்த நிலையானது மாறியுள்ளது. அதோடு கிரிப்டோ சந்தையும் சரிவுக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் இந்த அரசின் வழிகாட்டுதல்களும் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய பழகியவர்களுக்கு புதிய வரி பாதிக்கிறது. பாரம்பரியமாக இனி வரி விதிக்கப்படலாம். இது கிரிப்டோகரன்சிகளை ஒழுங்கமைக்க வழிவகுக்கலாம். ஆனாலும் இது கிரிப்டோ சந்தையில் சரிவினை ஏற்படுத்தியுள்ளது.