அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் அச்சுறுத்தி வருகின்றது எனில், மறுபுறம் அதனை விட மிக மோசமாக வேலையின்மை விகிதம் அச்சுறுத்தி வருகின்றது.
கடந்த சில மாதங்களாக சற்றே அதில் முன்னேற்றம் கண்டு வந்தாலும், அமெரிக்காவில் தொடர்ந்து வேலையின்மை விகிதத்தினை குறைக்கவும், அமெரிக்க மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாகவும், குடியுரிமை அல்லாத விசாவான ஹெச் 1பி உள்ளிட்ட பல விசாக்களை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜூன் மாதத்தில் தடை விதித்தார்.
இது உண்மையிலேயே அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கும், இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் ஒரு மோசமான செய்தியாகவே பார்க்கப்பட்டது.
அதிகம் இந்தியர்கள், சீனர்கள் தான்
ஏனெனில் ஹெச் 1பி விசாவினால் அதிகம் அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களும் சீனர்களும் தான். இதனால் அதிகம் பாதிக்கப்பட போவது இந்தியர்கள் தான். அதோடு இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் இந்திய ஊழியர்களை பணியமர்த்தி வந்த நிலையில் இனி அது குறையும். இதனால் அவர்கள் அதிக சம்பளத்தினை கொடுத்து உள் நாட்டிலேயே வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கூறப்பட்டது.
விசா மூலம் பணியமர்த்தல் குறைப்பு
இந்த விசா தடையானது அமெரிக்காவின் பாதுகாப்பினை காரணம் காட்டி எடுக்கப்பட்டது. இது திறமையான தொழிலாளர்கள் ஹெச் 1பி விசா மூலம் அமெரிக்காவில் (H 1B) விசா மூலம் நுழைவதை தடுக்கிறது. இதனால் ஏற்கனவே இந்த பிரச்சனைகளினால், விப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட், காக்ணிசன்ட் மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ஹெச் 1பி விசா மூலம் பணியமர்த்தலை குறைத்துள்ளன.
அதிக பயன் இந்தியர்களுக்கு தான்
அமெரிக்காவில் வேலைக்குச் சென்று அங்கேயே செட்டில் ஆவது பலரின் கனவாக இருக்கும். இதையொட்டி அந்நாட்டு நிறுவனங்களும் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்ய H-1B விசா பெற வேண்டும். இந்த ஊழியர்களுடன் வரும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு H-4 விசா வாங்க வேண்டும். இதன்மூலம் அதிகம் பயன்பெற்று வருபவர்கள் இந்தியர்கள் தான் அதிகம்.
விசாவில் தளர்வுகள்
இதனால் பல தரப்பிலும் மிக மோசமான விஷயமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தினை கூறும் விதமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன் கிழமையன்று H-1B விசா மற்றும் H-4 விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.
ஊழியர்களுடன் வருபவர்களுக்கும் தளர்வு
இந்த புதிய தளர்வுகளின் படி, அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பியவர்கள், மீண்டும் அதே நிறுவனத்தில் அதே வேலைக்கு திரும்பினால், இந்த ஊழியர்களுடன் வரும் மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் H-4 விசா வழங்கப்படும்.
யார் யாருக்கு தளர்வு?
மேலும் இந்த தளர்வானது டெக்னிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் லெவல் மேனேஜர்ஸ், சுகாதாரத்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கும் விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தளர்வுகள் L1 விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
அமெரிக்காவில் நவம்பரில் தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, இதில் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்களின் வாக்குகளும் இதில் அடங்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அதிபர் ட்ரம்ப் இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தான் பதவிக்கு வந்தால் ஹெச் 1பி விசா தடையினை முற்றிலும் நீக்குவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குகள் ஏற்றம்
இதற்கிடையில் டிரம்பின் இந்த அறிவிப்பால் ஐடி பங்குகளின் விலையானது சற்று ஏற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட அனைத்து பங்குகளும் ஏற்றத்திலேயே காணப்படுக்கின்றன. இதன் காரணமாக நிஃப்டி ஐடி குறியீடும் ஏற்றத்தில் காணப்படுகிறது.