ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்திய 52 நாள் போராட்டத்தை கைவிடுவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் பணிக்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று, நடந்த கூட்டத்திற்கு பின்னர், கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் அஸ்வத்தாமா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 52 நாட்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று முதல் கைவிடுகிறோம். எனவே செவ்வாய் கிழமை முதல் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வரவேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோரிக்கைய ஏற்றுக் கொள்ள வேண்டும்
மேலும் தொழிலாளர்கள் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மீது எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அரசு எங்களது கோரிக்கைகளை பரிவுடன் கவனிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த அரசு பஸ் ஒட்டுனர்கள் ஸ்டிரைக்கால் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாத நிலையில், அம்மாநில அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நஷ்டம் அதிகரிப்பு
தெலுங்கானா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும். இதோடு பணி பாதுகாப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் ஊழியர்களின் இந்த போராட்டத்தால் தினசரி நிர்வாகத்திற்கு 2 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
52 நாள் போராட்டம்
ஒரு மாதத்தையும் தாண்டி நீடித்து வந்த போராட்டத்தால் சுமார் 200 கோடி ரூபாய் இது வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கான ஸ்டேட் ரோடு டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் கடந்த சில வாராங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம், நவம்பர் 25ம் தேதி தான் போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 52 நாள் போராட்டம் நீடித்துள்ளது.
பேருந்துகள் இயங்கவில்லை
ஊழியர்களின் இந்த போராட்டத்தால், இந்த கார்ப்பரேஷன் தினசரி நஷ்டத்தை கண்டு வருவதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக மொத்த பேருந்துகளில் வெறும் 60 சதவிகித பேருந்துகள் அந்த சமயத்தில் இயங்கி வந்தது. இதன் மூலம் 10,400 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தன்னாட்சி நிறுவனத்தினை அரசுடன் இணைக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் முன்னரே தெரிவித்திருந்தார்.
தொடர் இழப்பு
கடந்த சில வாரத்திற்கு முன்பு டி.எஸ்.ஆர்.சி.டி அதிகாரி ஒருவர், இது வரை 900 கோடி ரூபாய் அளவிலான இழப்பை சந்தித்துள்ளது. இதில் பெரும்பகுதி எரிபொருள் செலவினங்களே. டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எங்களது கட்டண விலைகள் கடைசியாக கடந்த 2016ல் திருத்தப்பட்டது என்றும் கூறியிருந்தார்.
விலையேற்றம் செய்ய வேண்டும்
மேலும் டிக்கெட் விலையேற்றம் செய்து சுமார் 3.5 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், ஆனால் இது வரை டிக்கெட்கள் விலை அதிகரிக்கவில்லை. இந்த நிலையில் டிக்கெட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2015ல் ஊழியர்களின் சம்பளம் திருத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு இதே போல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தான் அதை பெற்றார்கள். ஆனால் தற்போதுள்ள நிலையில் இது செயல்படுத்த வாய்ப்பில்லை.
எச்சரிக்கயை மீறிய ஊழியர்கள்
இந்த நிலையில் கடந்த நவம்பர் 5-க்குள் பணியில் சேர முதலமைச்சர் ஊழியர்களுக்கு வழங்கிய இறுதி எச்சரிக்கையை மீறிய நிலையில், 400 பேர் மட்டுமே அந்த சமயத்தில் பணிக்கு திரும்பினர். மீதமுள்ளோர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் மீதமுள்ள 48,000 ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களின் மீது என்ன நடவடிக்கை பாயுமா? இல்லை வழக்கம் போல் செயல்பட நிர்வாகம் ஒத்துழைக்குமா? என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
தனியாருக்கு அனுமதி
இந்த நிலையில் பொது பேருந்துகளின் பற்றாக்குறையை போக்க புதியதாக 5,100 தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் ராவ் நவம்பர் 2ம் தேதி கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அவைகள் உடனடியாக செலுத்தப்பட வேண்டும். டீசலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. இது தவிர போக்குவரத்து வரியும் நிலுவையில் உள்ளது.
செயல்பாட்டு நிலுவை தேவை
மேலும் 2600 பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் பி.எஃப் தொகையாக 65 - 70 கோடி தேவைப்படுகிறது. இது தவிர இந்த் நிர்வாகத்தை இயக்க மாதம் 640 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த செலவினை செய்ய டிஎஸ்ஆர்டிசிக்கு வலிமையும் இல்லை. இந்த பிரச்சனைக்கு மத்தியில் நிர்வாகத்திற்கு தான் பிரச்சனைகள் அதிகமாகியுள்ளது. தினசரி 2 கோடி ரூபாய் நஷ்டம் கண்டு வந்த நிலையில் தற்போது அது 6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எப்படியோ இந்த போராட்டத்திற்கும், ஊழியர்களுக்கும் நல்ல விடிவுகாலம் வந்தால் சரி தான்.