இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஒன்று தான் இந்த டிவிஎஸ் நிறுவனம்
இந்த நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாட்டு நிறுவனம்.
பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீடு செய்வதற்காக டிவிஎஸ் நிறுவனத்தை நம்பி பணம் போட்ட முதலீட்டாளர்களுக்கு தற்போது நஷ்டம் (பேப்பர் லாஸ்) கொடுத்து இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்.
2018-ல் டிவிஎஸ் பங்கு
கடந்த ஜனவரி 02, 2018 அன்று டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை தன் வாழ்நாள் உச்சமான 794 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. அதன் பின் யார் கண் பட்டதோ.. என்ன ஆனதோ தெரியவில்லை. தொடர்ந்து சரிவு தான். இன்று வரை தன்னுடைய பழைய உச்ச விலையை டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்கு தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை போக்கு
கடந்த ஜனவரி 2, 2018 அன்று 794 ரூபாய்க்கு ஒருவர் பங்கு வாங்கி இருக்கிறார் என்றால், கடந்த டிசம்பர் 31 2018 அன்று அதே டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 571 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்தது. ஆக 28 சதவிகிதம் நஷ்டம்.
2019-ல் விலை சரிவு
அதன் பின் ஜனவரி 01, 2019 அன்று 580 ரூபாய்க்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை வர்த்தகமாக தொடங்கியது. 30 டிசம்பர் 2019 அன்று டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 468 ரூபாய்க்கு நிறைவடைந்தது. ஒருவர் 580 ரூபாய்க்கு பங்கை வாங்கி இருந்தால் கூட 19 சதவிகிதம் நஷ்டம்.
2020-ல் விலை போக்கு
ஜனவரி 1, 2020 அன்று டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பங்கு விலையில் 470 ரூபாய்க்கு வர்த்தகமாக தொடங்கியது. இன்று சுமாராக 430 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்த சில வார காலத்தில் கூட டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன பங்கு சுமாராக 8.5 % நஷ்டத்தைக் கொடுத்து இருக்கிறது.
புதிய பிரச்சினை
ஒட்டு மொத்த உலகத்தில் சுமாராக 18 சதவிகித ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் 30 சதவிகித டயர்கள் எல்லாமே சீனாவிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு இந்தியாவும் விதி விலக்கல்ல. ஆட்டோமொபைல் உதிரி பாகங்களாக, கடந்த 2019-ம் ஆண்டில், இந்தியா சுமாராக 4.2 பில்லியன் டாலர் அளவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்களாம்.
டிவிஎஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது எனவே டிவிஎஸ் மோட்டார்ஸ் உட்பட பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் வருவது சிரமமாக இருக்கிறதாம். இதனால் பிப்ரவரி 2020 ஆம் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய இருப்பதாக சொல்லி இருந்த அளவில் 10% உற்பத்தி, சீன சப்ளை பிரச்சனையால் குறையலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பங்கு விலை எதிரொலி
இந்த செய்தி வெளியான பின் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன பங்கு விலை மேலும் ஒரு சரிவை சந்தித்து இருக்கிறது. நேற்று மாலை 438 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன பங்கு விலை இன்று காலை 422 ரூபாய்க்கு வர்த்தகமாக தொடங்கியது. தற்போது சுமாராக 430 ரூபாயை தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
மொத்த நஷ்டம்
ஒருவர் 794 ரூபாய்க்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன பங்கை வாங்கி இப்போது வரை வைத்திருக்கிறார் என்றால், அவர் சுமாராக 45 சதவிகித நஷ்டத்துடன் இருப்பார். இப்படி தொடர்ந்து நஷ்டத்தை (பேப்பர் லாஸ்) கொடுத்துக் கொண்டிருந்தால் எந்த முதலீட்டாளர் நம்பி டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பங்கில் முதலீடு செய்வார்கள்.
என்ன செய்ய
பற்றாக்குறைக்கு, சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால், ஏற்றுமதி இறக்குமதி தடை பட்டு, நேரடியாக உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றால், நிறுவனத்தால் தான் என்ன செய்ய முடியும்..? அரசும், டிவிஎஸ் நிறுவனமும் இணைந்து எதையாவது செய்தால் தான் உண்டு.