இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு இரு சக்கரம் மற்றும் 3 சக்கர வாகன விற்பனையில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டிவிஎஸ் இன்று டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டிவிஎஸ் சமீப காலமாக வெளிநாட்டுச் சந்தையில் தனது வர்த்தகத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களையும் உருவாக்குவதில் அதிகப்படியான கவனத்தைத் செலுத்தி வந்த நிலையில், சந்தையில் டிவிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் குறித்த கணிப்புகள் கலவையாகவே இருந்தது.
டிசம்பர் காலாண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அதிக வர்த்தகத்தைப் பெறுவதற்காகச் சாத்தியம் கொண்ட காலாண்டு என்பதால் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் டிவிஎஸ் நிறுவன காலாண்டு முடிவுகளுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது.
டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காலாண்டு முடிவில், இந்நிறுவனத்தின் லாப அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 22 சதவீதம் அதிகரித்து 352.8 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு 288.3 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த வருமானம்
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி-யின் மொத்த வருமானம் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 5,706.4 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 14.7 சதவீதம் அதிகரித்து 6,545.42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
EBITDA அளவு
இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் அளவீட்டில் EBITDA அளவு 15.9 சதவீதம் அதிகரித்து 658.9 கோடி ரூபாயாக உள்ளது. EBITDA மார்ஜிந் அளவு 10 சதவீதத்தில் இருந்து 10.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
TVS விற்பனை
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டின் 3 மாத காலகட்டத்தில் 8.55 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த நிலையில் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 8.36 லட்சமாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் டிவிஎஸ்-ன் இரு சக்கர வாகன ஏற்றுமதி 2.07 லட்சத்தில் இருந்து 2.53 லட்சமாக அதிகரித்துள்ளது.
இடைக்கால ஈவுத்தொகை
இதே காலகட்டத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் 3 சக்கர வாகன விற்பனை 44000-ல் இருந்து 43000 ஆகக் குறைந்துள்ளது. டிவிஎஸ் நிர்வாகம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு இடைக்கால ஈவுத்தொகையாக 5 ரூபாயை அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகையைப் பிப்ரவரி 9ஆம் தேதியன்றோ அதற்குப் பின்பு முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும்.
மாருதி சுசூகி லாபம், வருவாய்
டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் மாருதி சுசூகி ஒருங்கிணைந்த மொத்த லாபம் 129.55 சதவீதம் அதிகரித்துச் சுமார் 2,391.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் வருவாய் இக்காலாண்டில் 24.96 சதவீதம் அதிகரித்து 23,253.3 கோடி ரூபாயில் இருந்து 29,057.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
லாபம் உயர காரணம்
மாருதி சுசூகி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்த காரணத்தால் அதன் கார்களின் விலையைத் தொடர்ந்து அதிகரித்து வந்தது, ஆனால் இந்த டிசம்பர் காலாண்டில் பல உற்பத்தி பொருட்களின் விலை குறைந்தது, இதனால் உபரியாக இருந்த நிலையில் லாபம் 130 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் டிவிஎஸ் நிறுவனத்தில் இந்த மேஜிக் நடக்கவில்லை.
மாருதி சுசூகி கார் விற்பனை
டிசம்பர் 2022 காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 4,65,911 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டுச் சந்தையில் 4,03,929 கார்களையும், ஏற்றுமதி மூலம் 61,982 கார்களை விற்பனை செய்துள்ளது.