போலி கணக்குகளின் முழு விபரங்களை தராவிட்டால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவேன் என தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை மிரட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் எலான் மஸ்க் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்க டுவிட்டர் முடிவு செய்துள்ளது.
எலான் மஸ்க் மற்றும் டுவிட்டர் இடையே நடந்த விற்பனை ஒப்பந்தத்தை முறிக்க டுவிட்டர் தனது பங்குதாரர்களிடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
டுவிட்டர்
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முடிவு செய்தார். இதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பது தெரிய வந்தது. 20 முதல் 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த கணக்கை முடக்க இருப்பதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மிரட்டல்
ஆனால் ட்விட்டர் நிறுவனம் இதனை மறுத்து 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலி கணக்குகள் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் உள்ள போலி கணக்குகளின் உண்மையான டேட்டாவை தராவிட்டால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவேன் என்று எலான்மஸ்க் மிரட்டினார்.
வாக்கெடுப்பு
இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனம் தற்போது தனது பங்குதாரர்களிடம் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்க முடிவு செய்த ஒப்பந்தத்தை முறித்து கொள்ள வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"ஃபயர்ஹோஸ்"
இருப்பினும் மஸ்க்குடன் தொடர்ந்து சில தகவல்களை டுவிட்டர் பகிர்ந்து வருகிறது. குறிப்பாக டுவிட்டரின் ஒரு பகுதி "ஃபயர்ஹோஸ்" குறித்த சில தகவல்களை டுவிட்டர் பகிர்ந்துள்ளது. இந்த "ஃபயர்ஹோஸ்" டேட்டாவை டுவிட்டர் தனது உரிம வணிகத்தின் ஒரு பகுதியாக சமூக ஊடக கண்காணிப்பு நிறுவனங்களுக்கு விற்கிறது. ஆனால் தகவல் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அதை மஸ்க்கிற்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ரகசிய தகவல்கள்
டுவிட்டர் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் கடந்த மாதம் இதுகுறித்து தனது டுவிட்டில் 'போலி மற்றும் ஸ்பேம் கணக்குகளின் கணக்கீடு நிறுவனத்திற்கு வெளியே செய்யப்படலாம் என்று தான் நம்பவில்லை என்றும், ட்விட்டரில் பகிர முடியாத சில தனிப்பட்ட தகவல்கள் உண்டு என்றும் தெரிவித்தார். இதன் மூலம் டுவிட்டர் அதன் பயனர் தளத்தைப் பற்றிய ரகசியத் தகவல்களை மஸ்க்குடன் எவ்வளவு பகிர்ந்து கொள்ளும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஒப்பந்தம் முறிவா?
டுவிட்டரின் உயர்மட்ட வழக்கறிஞர் விஜயா காடே அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'ஜூலை பிற்பகுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் மஸ்க் ஒப்பந்தம் குறித்து பங்குதாரர்களின் வாக்கெடுப்பை நடத்தலாம் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று கூறினார். இந்த வாக்கெடுப்புக்கு பின்னரே டுவிட்டரை மஸ்க்குக்கு விற்பனை செய்யலாமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவை டுவிட்டர் நிர்வாகம் எடுக்கும் என தெரிகிறது.