சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை, டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் கைபற்றியுள்ள நிலையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், ஊழியர்களிடம் ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது.
ட்விட்டருக்கு இனி இருண்டகாலம். அடுத்தது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என பரபர கருத்தினை தெரிவித்துள்ளார்.
சிஇஓ-வின் இந்த கருத்தினால் அதன் ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தினையே ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
எந்த திசையில் செல்கிறது?
மேலும் நிறுவனம் எந்த திசையில் செல்கிறது என தெரியவில்லை என அகர்வால் கவலை தெரிவித்துள்ளார். மேற்கண்ட இந்த கருத்துகள் 44 பில்லியன் டாலர் மதிப்பில் ட்விட்டர் தனியார் வசம் செல்லும் நிலையில் வந்துள்ளது.
ஐந்து மாதங்களுக்கு முன்பு ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால், திங்கட்கிழமையன்று ஊழியர்களுடனான சந்திப்பின்போது நிறுவனம், எலான் மஸ்கின் 44 பில்லியன் டாலர் மதிப்பினாலான கையகப்படுத்தலை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் இருக்குமா?
இந்த ஒப்பந்தம் முடிய இன்னும் மூன்று முதல் 6 மாதங்கள் ஆகலாம் என்று தான் மதிப்பிட்டுள்ளதாக அகர்வால் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். எனினும் எப்போதும் போல ட்விட்டரை இயக்குவதாகவும் அகர்வால் கூறியுள்ளார்.
மேலும் இந்த கையகப்படுத்தலை அடுத்து பணி நீக்கம் இருக்குமா? என்ற அச்சமும் ஊழியர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், இது குறித்த நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது. இது குறித்து எந்த தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை என நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யார் வழி நடத்த போகிறார்கள்?
இந்த ஒப்பந்தம் முடிவடையும் வரையில் அகர்வால் பொறுப்பில் இருப்பார் என்றும் தெரிகிறது. எனினும் அதன் பிறகு நிறுவனத்தினை யார் வழி நடத்த போகிறார்கள். யாரை தேர்வு செய்யலாம்? இதனை தொடர்ந்து வழி நடத்துவதில் மஸ்க் எவ்வளவு ஆர்வம் காட்டப் போகிறார் என தெரியவில்லை. மொத்தத்தில் நிச்சயமற்ற தன்மையே நிலவி வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
பேச்சு வார்த்தை
எனினும் ட்விட்டர் ஊழியர்களுடன் விரைவில் எலான் மஸ்க் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ட்விட்டர் நிறுவனமே ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது.