உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் கொரோனா தொற்றுக்குப் பின்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்குப் பின்பு பணவீக்கம், விலைவாசி உயர்வால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பேங்க் ஆஃப் அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு மூலம் அமெரிக்க அரசு சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டும் அல்லாமல் மாற்று வழியை அவசர அவசரமாகத் தேட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
பேங்க் ஆப் அமெரிக்கா
பேங்க் ஆப் அமெரிக்கா வெளியிட்டு உள்ள வார ஆய்வு அறிக்கையில் அமெரிக்காவின் மேக்ரோ எக்னாமிக் நிலை தொடர்ந்து வேகமாகச் சரிந்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தைக் குறைக்க நாணய கொள்கையில் அறிவிக்கப்பட்டு இருந்த தளர்வுகளைக் குறைக்க வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.
அமெரிக்கப் பொருளாதாரம்
இதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் விரைவில் ரெசிஷன் அதாவது மந்த நிலைக்குத் தள்ளப்படும் எனப் பேங்க் ஆப் அமெரிக்காவின் முன்னணி மற்றும் மூத்த மூலோபாய அதிகாரிகள் தனது வார அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எச்சரிக்கை
இதுகுறித்து பேங்க் ஆப் அமெரிக்கா-வின் தலைமை முதலீட்டு மூலோபாய அதிகாரியான மைக்கேல் ஹார்ட்நெட் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் பணவீக்க அதிர்ச்சி மோசமடைகிறது, வட்டி விகித அதிர்ச்சி துவங்கியது, ரெசிஷன் அதிர்ச்சி வரப்போகிறது எனத் தெரிவித்துள்ளார்.
பத்திரம், பங்குகள்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பத்திரம், பங்குகளைக் காட்டிலும், காமாடிட்டி மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவை அதிக முதலீட்டையும் லாபத்தையும் கொடுக்கலாம் எனவும் மைக்கேல் ஹார்ட்நெட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதலீட்டாளர்கள் உஷார வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்கப் பெடரல்
மேலும் வருகிற நாணய கொள்கை கூட்டத்தில் அமெரிக்கப் பெடரல் கட்டாயம் தனது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மே மாத துவக்கத்தில் இருந்து தனது 9 டிரில்லியன் டாலர் நிதிநிலை அறிக்கையில் இருந்து சொத்துக்கள் அளவீட்டை குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்கள்
இதனால் சர்வதேச முதலீட்டுச் சந்தைகள் மே மாதம் இறுதி வரையில் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொள்ளும். இதன் வாயிலாகவே தங்கம் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது, முதலீட்டாளர்கள் பங்கு மற்றும் பத்திர சந்தையில் இருந்து தங்களது முதலீட்டை வெளியேற்ற அதிக வாய்ப்பு உள்ளது.