இந்திய வங்கிகளில் தான் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுகிறார்கள் என்றால் வெளிநாட்டு வங்கிகளிலும் கடன் வாங்கிவிட்டுத் திருப்பச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது சில இந்திய நிறுவனங்கள். இவர்கள் மீதி நேரடியாக வழக்குத் தொடுக்க ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் 9 முக்கியமான வங்கிகள் இந்தியாவிற்கு வந்துள்ளது.
சுமார் 50,000 கோடி ரூபாய் அளவிலான கடனை இந்திய நிறுவனங்கள் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதாக அரபு நாட்டு வங்கிகள் தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட் கடன்கள்
துபாய் மற்றும் அபுதாபியில் இருக்கும் இந்திய நிறுவனங்களின் கிளைகள் தான் அதிகளவில் இதில் சிக்கியுள்ளது. அரபு வங்கிகள் இந்தியாவில் இவர்கள் செய்யும் வர்த்தகம் மற்றும் அரபு நாடுகளில் இருக்கும் இவர்களது வர்த்தகத்தை நம்பி கார்பரேட் கடன் கொடுத்துள்ளது. ஆனால் அவர்கள் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் காணத்தால் அரபு நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இப்படி இந்திய நிறுவனங்கள் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் கடனின் மதிப்பு 50,000 கோடி ரூபாய்.
இந்தியா
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொருட்டு 9 அரபு நாட்டு வங்கி தரப்பில் அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர். கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் வங்கிகள் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கவும் முடிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பதையும் அரபு வங்கிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
முக்கிய வங்கிகள்
எமிரேட்ஸ் NBD, அபுதாபி வர்த்தக வங்கி, Mashreq வங்கி, தோகா வங்கி ஓமன் தேசிய வங்கி, பஹ்ரைன் தேசிய வங்கி ஆகியவை தற்போது இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சில தனிநபர்களும் துபாய் மற்றும் அபுதாபியில் தங்களுக்கு இருக்கும் வர்த்தகத்தைக் காட்டி கார்பரேட் கடன் பெற்றுள்ளதாக இவ்வங்கிகள் தெரிவித்துள்ளது.
கார்பரேட் கடன் என்பதால் பெரும்பாலான கடன் அனைத்தும் பெரும் தொகை உடன் தொடர்புடையதாக உள்ளது. மேலும் இந்தக் கடன் அனைத்தும் கடந்த 10-15 வருடத்திற்குள் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிரடி நடவடிக்கை
இரு நாட்டு அரசு தரப்பிலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், அரபு நாட்டு வங்கிகள் முதன்மையாக NCLTயிடம் முறையிட உள்ளது. இதன் பின்பு அடுத்தடுத்த பணிகளை அதிரடியாகவும் வேகமாகவும் செய்ய உள்ளது.