உபர், ஓலா போன்ற டாக்ஸி சேவைகள் வந்த பிறகு தான் டாக்ஸிகளுக்கான கட்டணம் என்பது ஒரளவுக்கு குறைந்துள்ளது. ஏனெனில் சாமானிய மக்களும் ஆட்டோ கார் சேவைகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மற்ற சராசரி டாக்ஸி, ஆட்டோ சேவைகளை காட்டிலும், இந்த டாக்ஸி சேவைகளில் கட்டணம் சற்று குறைவு என்ற கருத்தும் உண்டு.
ஆனால் உபர் பயணி ஒருவர் தான் முன்பதிவு செய்ய முயன்றபோது, மும்பை நகரத்தில் பயணம் செய்ய கட்டணமாக 3,000 ரூபாய் கட்டணமாக காட்டியுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தவர், அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு கட்டணமா?
வழக்கமாக நீண்டதூரம் பயணம் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் மும்பைக்குள்ளேயே பயணம் செய்ய 3,000 ரூபாய் கட்டணம் என்பது கொஞ்சம் அதிகமாகத் தான் தோன்றுகின்றது. இதனால் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையில் மும்பை பயணி பகிர்ந்த படத்தை வைத்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மழையின் போது கார் புக்கிங்
மும்பையை சேர்ந்த ஷ்ரவன் குமார் சுவர்ணா, மழையின்போது உபர் காரை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரது புக்கிங் செய்யும் திரையில் காட்டப்பட்ட கட்டணம் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் தாதரில் இருந்து டோம்பிவிலிக்கு முன்பதிவு செய்துள்ளார். அதில் கட்டணமாக 3,041 ரூபாய் காட்டியுள்ளது.
விமான கட்டணம் குறைவு தான்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். கட்டணத்தினை பார்த்து வாயடைத்து போனதாகவும், தனது டாக்ஸி கட்டணத்தினை விட, விமானத்தில் கோவாலுக்கு செல்லும் கட்டணம் குறைவு தான் என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் தான் இந்த ட்விட்டர் பதிவானது பெரும் வைரலாகி வருகின்றது.
என்ன தான் காரணம்?
இது பலராலும் நம்ப முடியாது என்றாலும், சில அசாதாரண சூழல்களில் டாக்ஸி சேவை கட்டணங்கள் இவ்வாறு தான் இருக்கின்றன. மழை காலத்தில் தேவை அதிகரித்து வருவதால், கட்டணங்களும் அதிகரித்து வருகின்றன. அதோடு தற்போதைய காலகட்டங்களில் டீசல் விலையும் எகிறி வருகின்றது. இது சுவர்ணா போன்றோரை இனி டாக்ஸி சேவையை பயன்படுத்தாலாமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
பேருந்தை பயன்படுத்துங்க
சுவர்ணாவின் ட்வீட்டுக்கு பதிலத்துள்ள மற்றொரு பயனர், விமானம் அல்ல, நீங்கள் பேருந்தினை பயன்படுத்தும் போது இன்னும் மலிவான கட்டணத்தினை பெறலாம் என பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் இனி ஆட்டோ, கால் டாக்ஸி சேவை என்பதை காட்டிலும் பொதுபோக்கு வரத்து சிறந்ததாக இருக்கும். இதுவே உங்கள் பாக்கெட்டினை பதம் பார்க்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.