ஆன்லைன் டாக்ஸி செயலி நிறுவனமான ஊபர், பெட்ரோல், டிசல் விலை உயர்வால் ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டு வரும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்துவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் டாக்ஸி புக் செய்யும் போது அதை ஏற்கும் ஓட்டுநர்கள், எங்கு செல்ல வேண்டும் என்பதை பார்த்த பிறகு அதை ரத்து செய்கிறார்கள் அல்லது வாடிக்கையாளர்களை ரத்து செய்ய சொல்கிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் பயண ரத்து கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்
மே 10-ம் தேதி, வாடிக்கையாளர்களின் இதுபோன்ற பல்வேறு புகார்களுக்கு ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்கள் தீர்வு காண வேண்டும் என அரசுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முக்கிய உத்தரவுகள்
அதில் வாடிக்கையாளர்கள் டாக்ஸியை புக் செய்த பிறகு ரத்து செய்தால் அதற்கு ஆன்லைன் டாக்ஸி செயலிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பல சமயங்களில் ஓட்டுநர்கள் புக்கிங்கை ஏற்றுவிட்டு, அதை ரத்து செய்யுமாறு வாடிக்கையாளர்களிடம் வலியுறுத்துகிறார்கள். நேரத்திற்குத் தகுந்தார் போல கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது. உதாரணத்துக்குக் காலை, மாலை நேரங்களில் அதிக நபர்கள் அலுவலகம் செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக டாக்ஸி புக் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது போன்ற பல புகார்கள் குறித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்க வெண்டும். இதுபோன்ற முறைகேடுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.
டாக்ஸி ஓட்டுநர்கள்
மற்றொரு பக்கம் ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் ஆலோசனை குழு, ஓட்டுநர்களுடன் நடத்திய ஆலோசனையில், பெட்ரொல் விலை உயர்வால் தங்களது வருமானம் குறைந்து வருகிறது. எனவே கட்டணத்தை உயர்த்த வேண்டும். சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் மிக தொலைவில் உள்ள இடங்களுக்கு புக்கிங் கிடைக்கிறது. அந்த சமயங்களில் கூடுதல் செலவாகிறது. பிக்-அப் செய்வதிலிருந்து தான் கட்டணம் கணக்கிடப்படுகிறது. காத்திருப்பு கட்டணமும் இல்லை என ஓட்டுநர்கள் தெரிவித்து இருந்தனர்.
கட்டண உயர்வு
இந்நிலையில் அது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள ஓலா நிறுவனம், பெட்ரோல் விலை உயர்வைக் கருத்தில்கொண்டு கட்டண உயர்வைச் செய்வதாகவும், இதனால் ஓட்டுநர்களின் வருமானம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சேவையில் புதிய மாற்றங்கள்
ஓட்டுநர்கள் டாக்ஸி புக்கிங்கை ரத்து செய்வது மற்றும் வாடிக்கையாளர்களை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்தாமல் இருக்க, இனி ஓட்டுநர்களுக்கு புக்கிங்கை ஏற்கும் முன்பு எங்கு டிராப் செய்ய வேண்டும் என்றும் காண்பிக்கப்படும். ஓட்டுநருக்கு விருப்பம் இருந்தால் ஏற்கலாம். இல்லை என்றால் விட்டு விடலாம். இதனால் வாடிக்கையாளர்களை ஓட்டுநர்கள் பயணத்தை ரத்து செய்யுமாறு வற்புறுத்துவதும், வாடிக்கையாளர்கள் பயணத்தை ரத்து செய்வதும், அதனால் வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிப்பதும் குறையும் என ஊபர் கூறுகிறது.
தினசரி பேமண்ட்
திங்கள் முதல் வியாழன் வரையில் ஓட்டுநர்கள் ஆனலைன் மூலம் கட்டணத்தைப் பெறும் போது அது அடுத்த நாள் காலையில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெரும் கட்டணங்கள் திங்கட்கிழமை வங்கி கணக்கில் செலுத்தப்படும். புக்கிங் செய்த வாடிக்கையாளர் தொலைவில் இருந்தால் அப்போது ஓட்டுநருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன்
பல நேரங்களில் ஓட்டுநர்கள் ஆன்லைன் மூலம் கட்டணத்தைப் பெற மறுக்கின்றனர். அதன் காரணமாகவும் பயணத்தைச் செய்யும் முன்பே ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே ஓட்டுநர்கள் ரொக்கப் பனம், ஆன்லைன் என எதில் கட்டணத்தைப் பெற விரும்புகிறார்கள் என்பதையும் தேர்வு செய்யலாம். அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு புக்கிங் கிடைக்கும்.