கொரோனாவுக்குப் பின்பு உலகளாவிய பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதில் மிகப்பெரிய பங்கு ரஷ்யாவுக்கு உள்ளது என்றால் மிகையில்லை.
ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சர்வதேச பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பது இவ்விரு நாடுகள் மத்தியிலான போருக்கு பின்பு தான் உலக நாடுகளுக்கு விளங்கியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
2022 பிப்ரவரி மாதம் பல கட்ட பேச்சுவார்த்தை மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி ரஷ்யா - உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் பிற NATO அமைப்பு நாடுகள் ரஷ்யா மீது கடுமையாகப் பொருளாதார, வர்த்தகத் தடைகளை விதித்தது.
ஐரோப்பா, பிரிட்டன்
இந்தத் தடையின் காரணமாக ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகள் எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பது அனைவரும் பார்த்து வருகிறோம். இந்த வேளையில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் தொடர்ந்து தலைநகர் கீய்வ்-ஐ பிடிக்க ரஷ்ய படைகள் முயற்சி செய்து வருகிறது.
20.5 பில்லியன் டாலர் சொத்துக்கள்
இந்த நிலையில் பிரிட்டன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷ்ய அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்களுக்குச் சொந்தமான 18 பில்லியன் பவுண்ட் கிட்டத்தட்ட 20.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை அந்நாட்டு அரசு ரஷ்யா மீதான தடை விதிப்பின் மூலம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
தடை
பிரிட்டன் அரசு ரஷ்ய மீதும் ரஷ்ய அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மீது வர்த்தகத் தடை, முதலீட்டுத் தடை, பயணத் தடை ஆகியவை விதிக்கப்பட்ட உடனே சொத்துக்களைக் கைப்பற்றத் துவங்கியது.
லிபியா மற்றும் ஈரான்
இதன் மூலம் பிரிட்டன் அரசு இதற்கு முன்பு பொருளாதாரத் தடை காரணமாக லிபியா மற்றும் ஈரான் நாட்டின் சொத்துக்களைக் கைப்பற்றியதைக் காட்டிலும் அதிகமாக ரஷ்ய சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.
ரஷ்யா டாப்பு
அதாவது இதுவரை உலக நாடுகளின் பல்வேறு காரணங்களுக்காகக் கைப்பற்றிய மொத்த சொத்துக்களின் மதிப்பை விட ரஷ்யா தொடர்புடைய சொத்துக்களின் மதிப்பு 6 பில்லியன் டாலர் அதிகமாகும்.
ரஷ்யர்கள்
ரஷ்ய பில்லியனரான ரோமன் அப்ரமோவிச் மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஃப்ரிட்மேன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அவரது குடும்பத்தினர் மற்றும் இராணுவத் தளபதிகள் மீது இந்த ஆண்டுப் பிரிட்டன் தடை விதித்துள்ளது.
பிரிட்டன் அரசு
தற்போது பிரிட்டன் அரசு கைப்பற்றப்பட்ட 20.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் ரஷ்யர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மற்றும் வங்கியில் இருக்கும் பணம் மட்டுமே. இதைத் தவிர ரியல் எஸ்டேட், ஆடம்பர படகுகள் போன்ற பிற சொத்துகள் உள்ளது எனப் பிரிட்டன் நிதியமைச்சகத்தின் Office of Financial Sanctions Implementation வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இறக்குமதி
பிரிட்டன் அரசு சுமார் 95 சதவீத ரஷ்ய இறக்குமதி பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை முழுமையாக நிறுத்த உள்ளது.
அடுத்து என்ன நடக்கும்..?
ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வந்தாலும் உலக நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்பட்டால் மட்டுமே இந்த 20.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை பெற முடியும். இல்லையெனில் இதை ரஷ்யாவும் பெற முடியாது, பிரிட்டனும் பயன்படுத்த முடியாது.