இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து, அதிகளவிலான உயிரிழப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையிலும், மக்களுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்கப் போதுமான வசதிகள் இல்லாத நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உலக நாடுகளிடம் உதவிகளைப் பெற்று வருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே வேக்சின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு சுமார் 4500 கோடி ரூபாயை சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு அளித்துள்ள நிலையிலும், இந்திய மக்கள் தொகைக்கு இது போதாது.
இதன் காரணமாக மோடி தலைமையிலான மத்திய அரசு உலக நாடுகளிடம் இருந்து உதவியைப் பெற முன்வந்துள்ளது. ஏற்கனவே கூடுதலாக இருக்கும் கோவிட் வேக்சினை இந்தியாவிற்கு அளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பிரிட்டன் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், பிரிட்டன் இந்தியாவிற்கு வேக்சின் கொடுத்து உதவுமா என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளரிடம் கேள்வி கேட்டபோது, பிரிட்டன் நாட்டில் தற்போது உபரி வேக்சின் இல்லை என்பதால் இந்தியாவிற்கு அளிக்கவில்லை, தற்போது கையில் இருக்கும் வேக்சின் பிரிட்டன் மக்களுக்கு அளிக்கப் பயன்படுத்தப் போதுமானதாக இருக்கும் எனச் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பு மருந்து
பிப்ரவரி மாதம் பிரிட்டன் நாட்டில் கூடுதலாக இருக்கும் கோவிட் தடுப்பு மருந்தை, தேவைப்படும் நாடுகளுக்கு அளிக்க உறுதி அளித்திருந்தோம், ஆனால் தற்போது நாட்டுக் குடிமக்களுக்குத் தடுப்பு மருந்து அளிக்க வேண்டியது மிக முக்கியமானதாக மாறியுள்ள நிலையில் உபரியாக வேக்சின் தற்போது பிரிட்டனில் இல்லை என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் உதவியை நாடும் இந்தியா
இந்தியா தற்போது கோவிட் வேக்சின் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிடம் இருந்து திரவ ஆக்சிஜன், ஆக்சிஜன் உற்பத்தி செய்தும் மொபைல் வாகனம், ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்ஸ், வேக்சின் தயாரிப்பதற்கான மூலப்பொருள், கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள் எனப் பலவற்றையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் முறையாகக் கொரோனா பரவலை முன்கூட்டிய கட்டுப்படுத்த தவறிய காரணத்தால் குறுகிய காலகட்டத்தில் அதிகமானோருக்குக் கொரோனா தொற்று பரவியுள்ளது. மேலும் பல மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணம் அடைந்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது.