உலகம் முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி மூலம் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதில் இந்தியா, அமெரிக்கா என எவ்விதமான வித்தியாசம் இல்லாமல் அனைத்து நாடுகளின் பணவீக்கமும் அதிகரித்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வியலை மிகவும் பாதித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் ஜெரோம் பவல் வெளியிட உள்ள முக்கியமான அறிக்கைக்காகக் காத்திருக்கும் நிலையில் பிரிட்டன் நாட்டின் பணவீக்க தரவுகள் அந்நாட்டு மக்களை மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டு சந்தையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டில் நுகர்வோர் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் மே மாதம் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 9.1 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட 40 வருட உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
ஏப்ரல் மாதம் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 9 சதவீதமாக இருந்த நிலையில் இதைச் சமாளிக்க அந்நாட்டு நிதியமைச்சகத்தின் ஒப்புதல் உடன் மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டியை 0.25 சதவீதம் அதிகரித்து 1.25 சதவீதமாக அறிவித்தது. இதன் பலன்கள் ஜூன் மாதம் தரவுகளில் தான் தெரியும்.
40 வருட உச்சம்
பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மே மாதத்தின் 9.1 சதவீத பணவீக்கம் என்பது 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த பணவீக்கமாகும். இதேவேளையில் பேங்க் ஆப் இங்கிலாந்து இந்த வருடத்தின் இறுதிக்குள் அந்நாட்டின் பணவீக்கம் 11 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு பிரிட்டன் எரிபொருளில் துவங்கி மின்சாரம், உற்பத்தி பொருட்கள், போக்குவரத்து, உணவு பொருட்கள், மதுபானம் வரையில் அனைத்து நுகர்வு பொருட்கள் மற்றும் சேவையின் விலை உயர்ந்துள்ளது.
ரிஷி சுனக்
மே மாத தரவுகள் வெளியான பின்பு பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் கூறுகையில் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க அனைத்து வகையான முயற்சிகளையும் கருவிகளையும் பயன்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் கட்டாயம் பொருட்களின் விலை உயர்வு குறையும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள்
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு பிரிட்டன் நாட்டில் LIVING COST மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் பொருளாதாரத்திலும், பணிகளிலும் கீழ்தட்டில் இருக்கும் மக்களும், ஊழியர்களும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
உதவித்தொகை
இந்த விலைவாசி உயர்வை சமாளிக்கப் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் குறிப்பிடத்தக்க அளவிலான பணத்தை உதவித்தொகையாக அறிவித்துள்ளது, சமீபத்தில் பிரிட்டன் நாட்டின் lloyds bank ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 1000 பவுண்ட் பணத்தை உதவித்தொகையாக அளித்தது.