இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தை விடவும் படிப்பை மிகப்பெரிய அளவில் நம்பும் மக்கள் கொண்ட மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் பணக்காரர்கள் முதல் ஏழைக் குடும்பங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தனி மெனக்கெடல் இருக்கும்.
இதன் விளைவு தான் திருப்பூரில் ஒரு சிறு கிராமத்தில் MBA மருமகள் செய்த அற்புதம்.
பொள்ளாச்சி
கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் தான் சிந்து, இவரின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். படிப்பில் கெட்டியாக இருந்த சிந்து 12ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் படித்துப் பி.டெக் ஐடி படிப்பைப் பொள்ளாச்சியில் இருக்கும் மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
இந்திரா நூயி
சிறுவயதில் பெண்கள் சினிமா ஸ்டார், விளையாட்டு வீரர்கள் மீது ஆர்வம் கொள்வது இயல்பு ஆனால் சிந்து, பள்ளியில் படிக்கும் போதே பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் தலைவரான இந்திரா நூயி அவர்களின் ரசிகராக இருந்துள்ளார். சொல்லப்போனால் பள்ளி படிக்கும் போதே இந்திரா நூயி புகைப்படத்தைத் தன் வீட்டில் வைத்திருந்துள்ளார் சிந்து.
வார்விக் பிஸ்னஸ் ஸ்கூல்
இதன் வெளிப்பாடாகக் கல்லூரி படிப்பை முடித்த பின்பு சிந்து பிரிட்டன் நாட்டில் இருக்கும் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான வார்விக் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார். இதன் பின்பு சிந்து லண்டனில் சில வருடம் பணியாற்றினார்.
இந்தியா வருகை
2009ல் இந்தியா வந்த சிந்து தனது சகோதரர் உடன் சேர்ந்து ஈகாமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கி மொபைல் போன் மற்றும் புத்தகங்களை விற்பனை செய்யத் துவங்கினார். ஆனால் 2 வருடத்தில் இந்த வர்த்தகம் மூடப்பட்டது, இந்த இரண்டு வருடத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார் சிந்து.
சிந்து திருமணம்
சிந்துவின் வீட்டில் திருமணம் செய்துகொள்ளக் கேட்டுக்கொண்டதால் 2012ல் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிறு கிராமமான மொடக்குப்பட்டி-ஐ சேர்ந்த அருண் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அருண் அவர்களின் குடும்பம் கொப்பரை தேங்காய் விற்பனையில் உள்ளது.
கொப்பரை தேங்காய் விற்பனை
சிந்துவின் மாமனாரின் தம்பி பெயர் பலகை கூட இல்லாமல் கடை மூலம் கொப்பரை தேங்காய் விற்பனை செய்து வந்தது. அருண் அவர்களின் கூட்டுக் குடும்பம், அவர்களின் பெற்றோர் விவசாயம் துறையில் இருப்பதால் மொத்தமும் குடும்ப வர்த்தகமாக இருந்துள்ளது.
குழந்தை
திருமணமான ஒரு வருடத்திலேயே சிந்து - அருண் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 6 மாதம் மட்டுமே ஆன நிலையிலும் சிந்துவின் மாமியார் வர்த்தகத்தில் ஈடுபட ஊக்கமளித்தனர்.
தடை
இதனால் சிந்து - அருண் இருவரும் இணைந்து வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அருண் அவர்களின் குடும்ப வர்த்தகம் எவ்விதமான பெயரும் இல்லாமல் பதிவு செய்யாமலேயே இதுநாள் வரையில் இயங்கி வந்தது. இதனால் அடுத்தகட்டத்திற்குச் செல்ல இது தடையாக இருந்தது.
எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ்
சிந்து முதலில் குடும்பத்தினருடன் பேசி முதலில் வர்த்தகத்தைப் பதிவு செய்தார். 2013ல் கொப்பரை மற்றும் தேங்காய் வர்த்தகத்தை எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் என்ற பெயரில் பதிவு செய்தனர். மொத்த வர்த்தகத்தையும் குடும்பத்தினரே நிர்வாகம் செய்து வந்த நிலையில் முறையான நிர்வாகம் இல்லாமல் இருந்து.
நிர்வாகச் சீர்படுத்தல்
அடுத்தகட்டமாகச் சிந்து அனைத்துத் தரப்பு பணிகளையும் சீர்படுத்த மேற்பார்வையாளர் மற்றும் ஒரு கணக்காளர்-யும் நியமித்தார். இதன் பின்பு சிந்து உருவாக்கிய எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் (குடும்ப வர்த்தகம்) நிறுவனத்திற்கு இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான மாரிக்கோ (Marico) உடனான ஒப்பந்த்தை புதுப்பிக்கப்பட்டது.
மாரிக்கோ நிறுவனம்
2014ல் முதல் மாரிக்கோ நிறுவனத்திற்குத் தேங்காய்-க்குப் பதில் கொப்பரை தேங்காய்-ஐ சப்ளை செய்யத் துவங்கினார் சிந்து. இதன் மூலம் வர்த்தகம் படிப்படியாக மீண்டு வந்தது. 2017ல் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல AgriPro Industries என்ற புதிய நிறுவனத்தை எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான துவங்கப்பட்டது.
PRESSO எண்ணெய்
இந்த அக்ரிப்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாயிலாகத் தங்களிடம் இருக்கும் கொப்பரை தேங்காய்களை செக்கு எண்ணெய் தயாரித்து PRESSO என்ற பெயரில் அறிமுகம் செய்தார் சிந்து.
செக்கு எண்ணெய்
செக்கு எண்ணெய் தயாரிக்க இயந்திரங்கள் மற்றும் அலையைக் கட்டமைக்க 12 லட்சம் ரூபாய் தொகையை உறவினர் மற்றும் நண்பர்களிடமும், 8 லட்ச ரூபாயை சிந்து-வின் தங்க நகைகளை வைத்து மொடக்குப்பட்டி-யிலேயே செக்கு எண்ணெய் தயாரிப்புத் தளம் அமைக்கப்பட்டது.
எண்ணெய் உற்பத்தி
உற்பத்தியிலும், தரத்திலும் எவ்விதமான குறைபாடும், தாமதமும் இருக்க கூடாது என்பதை முடிவு செய்த சிந்து மற்றும் அருண் தேங்காய், கடலை, எள் ஆகியவற்றை உள்ளூர் மற்றும் அருகில் இருக்கும் மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்து PRESSO பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டது.
இந்தியா முழுக்க விரிவாக்கம்
PRESSO பிராண்ட் வெறும் கோவை பொள்ளாச்சி மட்டும் விற்பனை செய்யும் பிராண்டாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த சிந்து, ஈகாமர்ஸ் அனுபவம், எம்பிஏ படிப்பு, லண்டன் வேலையில் கிடைத்த அனுபவம் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து வர்த்தகத்தை ஆன்லைன் தளத்திற்குக் கொண்டு சென்று இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளுக்கு வர்த்தகத்தைச் சில வருடங்களிலேயே விரிவாக்கம் செய்தார் சிந்து.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா
தற்போது PRESSO செக்கு எண்ணெய் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, போபால், ஹரியானா, ஆகிய மாநிலத்திலும் பிரபலமாக உள்ளது. மேலும் கத்தார் நாட்டுக்குத் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் மலேசியா மற்றும் பிரிட்டன் விற்பனையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சிந்து.
6 கோடி ரூபாய் வர்த்தகம்
2020-21ஆம் நிதியாண்டில் PRESSO பிராண்ட் மற்றும் எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் மூலம் சுமார் 6 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதலை (Turnover) அடைந்துள்ளது. மேலும் சிந்து சுமார் 15 பெண்களை வைத்து மொத்த வர்த்தகத்தையும் நிர்வாகம் செய்து வருகிறார்.
படிப்பு போதும்
நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்குக் கிராமம், பண பலம், ஆண் பெண் பேதம் போன்ற அனைத்தையும் படிப்பு என்ற ஒன்று தலைதெறிக்க ஓட செய்துவிடும் என்பதற்குச் சிந்து முக்கியமான எடுத்துக்காட்டு. இதற்கு ஏற்றவாறு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தகம் மூலம் கிராமம், டவுன், பெரு நகரம் தடைகளை உடைத்துள்ளது.
பொறுமை
அனைத்திற்கும் மேலாகக் குடும்பத்தின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது, அதிலும் குடும்ப வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்பினால் பொறுமை மிகவும் அவசியம்.