கொரோனா மக்கள் மத்தியில் பரவுவதைக் குறைப்பதற்காக, முன் அறிவிப்பின்றி மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தது. இதனால் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை முழுவதுமாக முடங்கியது. இதனால் இந்திய வேலைவாய்ப்பு சந்தை எப்போதும் சந்திக்காத மோசமான நிலையை எதிர்கொண்டது.
மார்ச் 3வது வாரம் வரை இந்தியாவில் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் 6.7 சதவீதம் வரையில் இருந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே வேலைவாய்ப்பின்மை ரூத்ர தாண்டவம் ஆட துவங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரக் காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை கணிசமான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதால் வேலைவாய்ப்பின்மை அளவிடு குறைந்துள்ளது.
வேலையில்லா திண்டாட்டம்
மார்ச் மாத்தின் 3வது வாரத்தில் 8.4 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம், 4வது வாரத்தில் 23.4 சதவீதம் வரையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன் பின்பு ஏப்ரல் முதல் வாரத்தில் 23.8 சதவீதம், 2வது வாரத்தில் 24 சதவீதம் என உயர்ந்தது.
இதன் பின்பு ஏப்ரல் 3வது வாரத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வேலையில்லா திண்டாட்டம் 26.2 சதவீதம் வரையில் உயர்ந்து நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு சந்தையும் சீர்குலைத்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவு
இந்நிலையில் ஏப்ரல் 26 உடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 26.2 சதவீதத்திலிருந்து 21.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நாட்டில் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
வேலைவாய்ப்பு விகிதம்
மார்ச் 22 அதாவது நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கும் முன் இந்தியாவில் வேலைக்குச் செல்வோர் மக்கள் தொகையில் 42.6 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்திருந்த நிலையில், ஏப்ரல் 26 உடன் முடிந்த வாரத்தில் இதன் அளவு 35.4 சதவீதமாகச் சரிந்துள்ளது.
7.2 கோடி பேர்
இரண்டுக்கும் சுமார் 7.2 சதவீதம், இந்தியாவில் 1 சதவீதம் வேலைவாய்ப்பு விகிதம் என்றால் 1 கோடி பேர் வேலைக்குச் செல்வதாகப் பொருள். இதன் படி இந்தியாவில் லாக்டவுன் காலத்தில் மட்டும் சுமார் 7.2 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
10 லட்சம் கோடி
இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் இந்தியப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 8 முதல் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்புப் பாதிப்பு பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனக் கூறப்படும் ஊரகப் பகுதிகளிலும் இருக்கும் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியப் பொருளாதாரம்
ஏற்கனவே இந்தியப் பொருளாதாரம் மோசமான கட்டத்திலிருந்து பல்வேறு மாற்றங்கள், அதிரடி முடிவுகள் மூலம் மீண்டு வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவைத் தாக்கியது. இதன் மூலம் இத்தனை நாள் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீண் ஆகியுள்ளது. இதன் எதிரொலியாக ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021ஆம் நிதியாண்டில் மிகவும் குறைவான ஒற்றை இலக்கு வளர்ச்சியைத் தான் இந்தியப் பொருளாதாரம் அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
2020-21 நிதியாண்டு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டால் 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கும் தெரியுமா..?
2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.0 சதவீதமும், 2வது காலாண்டில் -10.3 சதவீத பொருளாதாரச் சரிவு (எதிர்மறை வளர்ச்சி), 3வது காலாண்டில் -2.2 சதவீத பொருளாதாரச் சரிவு, 4வது காலாண்டில் -0.8 சதவீத பொருளாதாரச் சரிவு என மொத்த 2021ஆம் நிதியாண்டில் -2.6 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும்.
அதாவது தற்போது இருக்கும் 4.5 சதவீத வளர்ச்சியிலிருந்து -2.6 சதவீத பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும்.
என்ன நடக்கும்..?
இந்தியா எதிர்பாராத விதமாகக் கொரோனா மூலம் கொடூரமாகப் பாதிக்கப்பட்டால் நாட்டில் குறைந்தபட்சம் 50 சதவீத வேலைவாய்ப்புகள் காணாமல் போகும், விலைவாசி கடுமையாக உயரும், வங்கிகள் திவாலாகக் கூட வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 100 ரூபாய் கூடத் தாண்டும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு 20,000க்கும் குறைவான புள்ளிகளை அடையும்.
இவை அனைத்தையும் தாண்டி இந்திய மக்கள் வறுமையால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலைக்குச் செல்லக் கூடும்.