இந்தப் பட்ஜெட் அறிக்கை தனிநபர்களுக்கும், மாத சம்பளக்காரர்களுக்கும் சாதமாக இருக்காது என வெளியான கணிப்புகள் அனைத்தையும் மொத்தமாக உடைத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாகத் தாக்கல் செய்தார்.
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட வருமான வரித் தளர்வுகள் என்ன..? இதனால் மக்கள் எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும்..?
ரொம்ப முக்கியமானது
பழைய மற்றும் புதிய வருமான விதிப்பு முறையின் கீழ் வருமான வரி செலுத்தும் தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்கு வரி சுமையைக் குறைக்கும் வகையில் 7 லட்சம் ரூபாய் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax rebate) சலுகை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த டாக்ஸ் ரிபேட் அளவு 5 லட்சமாக உள்ளது.
2வது முக்கிய அறிவிப்பு
நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி விதிப்பு முறையில் இருக்கும் வரிப் பலகை எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.
50000 ரூபாய் கூடுதல் நன்மை
இது மட்டும் அல்லாமல் 2.5 லட்சம் ரூபாய் வரையில் இருந்த ஜீரோ வரி விதிப்பு அளவு தற்போது புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 50000 ரூபாய்க்கு கூடுதல் வரிச் சலுகை கிடைத்துள்ளது.
இந்த உயர்வு பழைய வருமான வரி விதிப்பு முறைக்கு இல்லை.
புதிய வரிப் பலகை
புதிய வருமான விதிப்பு முறைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால், இதை மேலும் எளிதாக்கும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் புதிய வருமான வரி விதிப்பு முறை கீழ்
0 - 300000 : 0 சதவீத வரி
300000-600000 : 5 சதவீத வரி
600000 -900000 : 10 சதவீத வரி
900000 - 1200000 : 15 சதவீத வரி
1200000 -1500000 : 20 சதவீத வரி
1500000 ரூபாய்க்கு மேல் : 30 சதவீத வரி
எவ்வளவு பணம் மிச்சம்
ஆண்டு வருமானம் 9 லட்சம் ரூபாய்க் கொண்டு உள்ள தனிநபர் வருமான வரியாக மொத்தமாக 45,000 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதுமானது. இது அவரது வருமானத்தில் வெறும் 5 சதவீதம் மட்டுமே, இப்போது இதற்கு முன்பு எவ்வளவு செலுத்தப்பட்டது..?
25 சதவீதம் பணத்தை மிச்சம்
தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பு படி கணக்கிட்டால் 60,000 ரூபாய் செலுத்த வேண்டும். இன்று அறிவிக்கப்பட்டு உள்ள மாற்றம் மூலம் வரி செலுத்தும் தொகையில் 25 சதவீதம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
15 லட்சம் ரூபாய் வருமானம்
அதேபோல 15 லட்சம் ரூபாய் வருமானம் உள்ள தனிநபர் தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பு படி கணக்கிட்டால் 1,87,500 ரூபாய் செலுத்த வேண்டும். இன்று அறிவிக்கப்பட்டு உள்ள மாற்றம் மூலம் வரி செலுத்தும் தொகையில் 20 சதவீதம் பணத்தை மிச்சப்படுத்தி ரூ. 1.5 லட்சம் அல்லது அவரது வருமானத்தில் 10 சதவீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும் எனப் பட்ஜெட் 2023 அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.