தமிழ்நாடு 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை கொண்டு உள்ளது தமிழ்நாடு அரசு.
இந்த 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய புதிய தொழிற்சாலைகளை ஈர்த்து, அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக மாநிலத்தின் பல நகரங்களில் சிப்காட் தொழிற் பூங்காவை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
இந்த நிலையில் தற்போது அதிகளவிலான நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தைத் தமிழ்நாட்டில் அமைக்கவும், அதிலும் குறிப்பாகக் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் அமைக்க ஆர்வம் காட்டி வருவதால் இப்பகுதியில் சிப்காட் பூங்கா அமைக்கத் தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி வருகிறது.
சிப்காட்
தமிழ்நாட்டின் பல முக்கியத் தொழில் நகரங்களில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கத் தமிழ்நாடு அரசு நிலத்தைக் கைப்பற்றி வரும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதி குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
3,000 ஏக்கர்
சூளகிரி (கிருஷ்ணகிரி) மற்றும் தேன்கனிக்கோட்டை (ஓசூர்) ஆகிய இடங்களில் வரவிருக்கும் சிப்காட் பூங்காக்களுக்குத் தேவையான 3,000 ஏக்கர் நிலத்தில் சுமார் 70 கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு சிப்காட் பூங்காவில் சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்பப்படுகிறது.
டெக் பார்க்
இதேபோல் சென்னையில் இன்டர்நேஷ்னல் ரேடியல் டெக் பார்க் கட்டிட பணிகள் வேகமடைந்து வருவதால், கமர்சியல் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் முதல் கட்ட பணிகள் முடிவின் மூலம் சுமார் 2.6 மில்லியன் சதுரடி அலுவலக இடம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
தைவான்
தைவான் நாட்டில் இருந்து 10 நிறுவனங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 740 கோடி ரூபாய் முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீட்டு மூலம் சுமாராக 4500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கோத்தாரி-பீனிக்ஸ் கார்ப்பரேஷன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூரில் பிரமாண்ட காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். கோத்தாரி-பீனிக்ஸ் கார்ப்பரேஷன் அதன் தோல் அல்லாத காலணி ஆலையைப் பெரம்புலூரில் அமைக்க உள்ளது. இந்த ஆலை 580 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் நிலையில் இத்தொழிற்சாலை கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்ததும் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
தமிழ்நாடு 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் மாநிலத்தின் பல பகுதியில் வேலைவாய்ப்புகளையும், வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகச் சென்னையில் மட்டுமே புதிய தொழிற்சாலையை அமைக்காமல் பல மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
மக்களின் வாழ்க்கைத் தரம்
இந்த வளர்ச்சி மூலம் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பது மட்டும் அல்லாமல் மக்களின் வாழ்க்கை தரம் பெரிய அளவில் மேம்பட உதவும் என்பது முக்கியமானதாகும். ஆனால் இத்திட்டங்கள் மக்களுக்குப் பலன் அளிக்கச் சில வருடங்களாவது ஆகும்.